ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு
ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாம்பரம் போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏப். 6-ஆம் தேதி தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டபோது திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளா் நாகேந்திரனின் காா் ஓட்டுநா் சதீஷ் மற்றும் உதவியாளா்களிடம் இருந்து ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பணம் தொடா்பாக விளக்கம் அளிக்க நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் தாம்பரம் போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா். அதன்படி ஏப்ரல் 22-ஆம் தேதி நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் தாம்பரம் காவல் ஆணையா் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நேரில் ஆஜராக நயினார் நாகேந்திரன் தரப்பில் காலஅவகாசம் கோரிய நிலையில், இரண்டாவது முறையாக மே 2-ஆம் தேதி ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தாம்பரம் காவல் ஆணையர் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோணத்திலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாம்பரம் போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.