வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

மேலப்புதூர் கிராமத்தில் தங்களுக்கான வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திடம் வேளார் சமூகத்தினர் மனு கொடுத்துள்ளனர்.
வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!
Published on
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் மேலப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த வேளார் சமூகத்தினர் அப்பகுதியில் உள்ள முப்புடாதி அம்மன் கோவிலில் தங்களின் வழிபாட்டு உரிமையை ஆதிக்கச் சாதியினர் மறுப்பதாகவும், கோவிலை நிர்வாகம் செய்து வரும் தேவர், நாடார், முதலியார் மற்றும் பிள்ளைமார் சமூகத்தினரிடம் இருந்து தங்களுக்கான உரிமையை மீட்டுத் தருமாறும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.

வேளார் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பல நூற்றாண்டுகளாக மேலப்புதூர் கிராமத்தில் வசித்து வருகின்றனர். அவர்கள் பானைகள் குயவு செய்யும் தொழில் செய்து வந்ததால் அப்பகுதியில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு தலைக்கட்டு வரியாக பணத்திற்கு பதில் பானைகளை வழங்கி வந்துள்ளனர்.

பின்னர், அவர்களில் பலரும் அந்தத் தொழிலைக் கைவிட்டதால் கோவில் திருவிழாவிற்கு மற்ற சமூகங்களைப் போல, தலைக்கட்டு வரியைப் பணமாக செலுத்த முன் வந்துள்ளனர். கோவில் நிர்வாகமும் கடந்த 2021, 2022 ஆண்டுகளில் அவர்களிடம் இருந்து தலைக்கட்டு வரியாக பணம் வாங்கியுள்ளனர். ஆனால், கடந்த 2023-ல் கோவிலில் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றவர்கள் வேளார் சமூகத்தினரிடம் வரி வசூலிக்க மறுத்துள்ளனர்.

இதனை மனுவில் குறிப்பிட்டுள்ள வேளார் சமூகத்தினர், தங்களுக்கான வழிபாட்டு உரிமையை மறுப்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

முப்புடாதி அம்மன் கோவிலின் திருவிழா வரும் ஏப்ரல் 30 அன்று தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com