நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.
நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே பால் கட்டளை வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி நாராயணன். இவர், தனது குடும்பத்தினரை கடந்த ஆறு மாதமாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு மனு ஒன்றை அளித்தார்

இது குறித்து நாராயணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் எங்கள் பகுதியில் உள்ள ஆதீனத்துக்கு சொந்தமான சுமார் இரண்டரை ஏக்கர் கோயில் நிலத்தை வாங்கினேன். அந்த நிலத்தை ஊருக்கு தரும்படி ஊர் நிர்வாகிகள் கேட்டனர். அதை கொடுக்க மறுத்த காரணத்தால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு எனது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து ஊர் நாட்டாமை இளையராஜா உத்தரவிட்டார்.

மேலும், என்னிடம் பேசினால் அவர்களையும் ஊரை விட்டு ஒதுக்கும்படியும், அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும்படியும் கூறினார்.

இப்படி என்னிடம் பேசிய 3 பேர் குடும்பத்தையும் தற்போது ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதால், எங்களிடம் யாரும் பேசுவதில்லை. விவசாய வேலைகளுக்கு ஆள்கள் வருவதில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டாமை சொல்வது தான் எங்கள் ஊரில் தீர்ப்பு, அவரது தீர்ப்புக்கு ஊரே கட்டுப்பட வேண்டும்.

என்னால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் ஊரோடு சேர வேண்டுமென்றால் ஊரார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதோடு பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். நான் ஊரோடு சேர வேண்டுமென்றால் அந்த நிலத்தை எழுதி வைக்க வேண்டும் என்கிறார்கள்.

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!
வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

காவல்துறை மற்றும் நீதிமன்றம் போன்றவற்றிற்கு ஊர் நாட்டாமை கட்டுப்பட மாட்டார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம், போலீசார் பேசியும் ஊர் நாட்டாமை கேட்கவில்லை எனத் தெரிவித்தார்.

இது குறித்து நாராயணனின் மனைவி மணிமேகலை அளித்த பேட்டியில், நாங்கள் வாங்கிய நிலத்தை எழுதி தரும்படி கேட்டார்கள், நிலத்தை கொடுக்காதால் எங்களை ஊரை விட்டு ஒதுக்கி விட்டனர்.

எங்கள் குழந்தைகளிடம் கூட யாரையும் பேச விடுவதில்லை. எனது குழந்தையிடம் பேசிய மற்றொரு குழந்தையை பார்த்து அவரது தந்தை, ’அவனை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள் அவனிடம் பேசாதே ’என்று கூறியிருக்கிறார்.

இதை எனது மகன் என்னிடம் கூறும் போது கவலையாக இருக்கிறது. இந்த நவீன காலத்திலும் இது போன்று ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதற்கிடையில் நாராயணனிடம் வேலைக்கு சென்ற பெருமாள் என்பவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகவும் அவர் ஊரார் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போன்ற விடியோவும் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் ஊர் நாட்டாமை முறை சட்ட ரீதியாக ஒழிக்கப்பட்டுள்ளது. திரும்பும் இடமெல்லாம் தொழில்நுட்பம் அபரீத வளர்ச்சி அடைந்த இந்த காலத்திலும் ஊர் நாட்டாமை தீர்ப்புக்கு மக்கள் கட்டுப்படும் பழக்க வழக்கம் நெல்லையில் நீடிக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, பிரச்னைக்குரிய அந்த இடத்தை முதலில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஊருக்காக வாங்க முடிவு செய்தனர். ஆனால் நாராயணன் முதல் ஆளாக முந்திக்கொண்டு யாருக்கும் தெரியாமல் தனிப்பட்ட முறையில் அந்த நிலத்தை வாங்கி விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஊர் நிர்வாகிகள், நாராயணனை எந்த நிகழ்விலும் சேர்த்துக் கொள்ளவில்லை. மற்றப்படி கடையில் அவருக்கு பொருள்கள் வாங்கவோ, தண்ணீர் பிடிக்கவோ ஊர் தலைவர்கள் தடை விதிக்கவில்லை, இருப்பினும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com