
நெல்லை மாநகராட்சியின் ஏழாவது மேயராக ராமகிருஷ்ணன் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
முன்னதாக இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பங்கேற்க மேயர் ராமகிருஷ்ணன் வீட்டில் இருந்து சைக்கிளில் மாநகராட்சி அலுவலகம் வந்தார். தொடர்ந்து, புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். சைக்கிளில் வந்த மேயருக்கு மாநகராட்சி அலுவலக வாசலில் திமுக சார்பில் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நெல்லை மாநகராட்சியின் ஏழாவது மேயராக ராமகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகராட்சி ஆணையர் சுக புத்ரா மேயருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய மேயருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த பி. எம். சரவணன் கடந்த ஜூலை 3 ஆம் தேதி பதவியை ராஜிநாமா செய்த நிலையில், மேயர் பதவி காலியானது. இதையடுத்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் தேர்தலை நடத்துவதற்கு அறிவுறுத்தலை வழங்கியது.
மாநகராட்சி ஆணையரும், மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலருமான சுகபுத்ரா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, தேர்தலுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது. நெல்லை மேயர் திமுக வேட்பாளராக 25 ஆவது வார்டு உறுப்பினரான ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்த, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி நெல்லை மாநகராட்சி மேயருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் மற்றும் திமுகவின் அதிருப்தி கவுன்சிலர் பவுல்ராஜ் போட்டியிட்டனர். நெல்லை மேயர் தேர்தலில் ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பவுல் ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.