
நமது நிருபர்
"யூடியூபர்' சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் புதன்கிழமை விசாரித்தனர்.
சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பாலாஜி சீனிவாசன், "உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமனறம் சவுக்கு சங்கரை விடுவிக்க உத்தரவிட்ட பிறகும், அவர் மீண்டும் தமிழக காவல் துறையால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்' என்று தெரிவித்தார்.
இதைக்கேட்ட தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் சவுக்கு சங்கருக்கு நிவாரணம் வழங்கிய பிறகும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பி அதற்கான பதிலையும் உறுதிப்படுத்திக் கொண்டார். இதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கருக்கு எதிரான வழக்குகளில் அவர் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர்.
சங்கர் மீதான அனைத்து வழக்குகளின் விவரங்கள் மற்றும் அவர் அளித்த நேர்காணல்களை அறிக்கையாக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.