
தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
தலைமைச்செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து முதல்வரின் முதன்மை தனிச் செயலாளராக இருந்த நா.முருகானந்தம் ஐஏஎஸ் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக நேற்று(ஆக. 19) நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, முதல்வரின் தனிச் செயலாளர்களும் இன்று மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்த அரசாணை இன்று வெளியிடப்பட்டது.
அதன்படி, முதல்வரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தவர்.
இவருக்கு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை, நிதித் துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை, நெடுஞ்சாலை மற்றும் துறைமுகம், தொழில் துறை, இயற்கை வளங்கள், பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை, பொதுமக்கள் மற்றும் மறுவாழ்வு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.
முதல்வரின் இரண்டாவது செயலாளராக எம்.எஸ். சண்முகம் ஐஏஎஸ் மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு விவசாயத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, முதல்வர் அலுவலக நிர்வாகம், உயர்கல்வித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், சட்டத் துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தமிழ் வளர்ச்சித் துறை உள்ளிட்டவை ஒதுக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கால்நடை, பால் வளம் மற்றும் மீன்வளத்துறை, சுற்றுச்சூழல், மக்கள் நல்வாழ்வுத் துறை, பள்ளிக்கல்வித் துறை, சமூக நலத்துறை, விளையாட்டுத் துறை உள்ளிட்டவை ஒதுக்கப்பட்டுள்ளன.
உமா நாத், எம்.எஸ். சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய மூவரும் முறையே முதல்வரின் 2, 3, 4 ஆவது தனிச் செயலாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.