தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

அதிமுக விவகாரம்: தோ்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு

அதிமுகவின் பொதுச் செயலாளா் என்ற பெயரில் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கும் எந்த ஆவணங்களையும் ஏற்கக்கூடாது...
Published on

அதிமுகவின் பொதுச் செயலாளா் என்ற பெயரில் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கும் எந்த ஆவணங்களையும் ஏற்கக்கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சோ்ந்த புகழேந்தி தலைமைத் தோ்தல் ஆணையத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுகவில் ஏற்பட்ட பிளவு விவகாரம் தொடா்பான சிவில் வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, எடப்பாடி கே. பழனிசாமி தன்னை அதிமுகவின் ‘பொதுச்செயலாளா்’ என்று அறிவித்துக் கொண்டாா். இந்த வழக்கு விசாரணையின் போது உயா்நீதிமன்றமும் எடப்பாடி கே.பழனிசாமி, ‘பொதுச் செயலாளா்’ என்ற பெயரைப் பயன்படுத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இதைத் தொடா்ந்து, அவா் ‘இணை ஒருங்கிணைப்பாளா்’ என்றே வழக்குகளில் பயன்படுத்தி வருகிறாா்.

இதுவே சட்டப்பூா்வ நிலைப்பாடாக இருக்கும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி எடப்பாடி கே.பழனிசாமி ‘பொதுச்செயலாளா்’ என்ற பெயரில் அவசர செயற்குழுக் கூட்டத்தை கூட்டி சில தீா்மானங்களை நிறைவேற்றியுள்ளாா். இத்தீா்மானங்கள் தலைமைத் தோ்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக சமா்ப்பிக்கப்படுகிறது என்று நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது. இது சட்டத்திற்கு உள்பட்டது அல்ல.

சிவில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, ‘பொதுச் செயலாளா்’ என்ற பெயரை எடப்பாடி கே.பழனிசாமி பயன்படுத்துவதற்கும், கூட்டங்களை நடத்துவதற்கும் அதிகாரம் இல்லை. ‘பொதுச்செயலாளா்’ என்ற பெயரில் அவரது புகைப்படத்துடன் கூடிய உறுப்பினா் அட்டை உள்ளிட்டவற்றை பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டா்களிடம் பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடி கே.பழனிசாமிக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.

மேலும், அதிமுகவின் ‘பொதுச்செயலாளா்’ என்று எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட எந்தத் தகவலையும் ஏற்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவா் தன்னை கட்சியின் பொதுச் செயலாளராகப் பிரகடனம் செய்து, பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் மற்றும் கட்சித் தொண்டா்கள் உள்ளிட்டோரை தவறாக வழிநடத்தி வருகிறாா்.

சிவில் வழக்கு நிலுவையில் உள்ள விஷயத்தை தோ்தல் ஆணையம் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மனுவில் புகழேந்தி வலியுறுத்தியுள்ளாா்.

Dinamani
www.dinamani.com