பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

வெற்றிக்கு வில்லங்கம்? வாக்குகளைப் பிரிக்கும் சசிகலா - ராமதாஸ் மற்றும் சிலர்!

வரும் பேரவைத் தேர்தலில் சசிகலா - ராமதாஸ் கூட்டணியால் அதிமுகவின் வாக்குகள் பிரியுமா என்பது பற்றி...

News image

எடப்பாடி பழனிசாமி | ராமதாஸ் - சசிகலா - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 4:59 pm IST

அதிமுகவால் ஓரங்கட்டப்பட்ட சசிகலாவும் தற்போது அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள அன்புமணியால் ஓரங்கட்டப்பட்ட ராமதாஸும் கூட்டணி வைத்துள்ளதன் மூலமாக, வரும் பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் பிரியும் என்றே கூறப்படுகிறது.

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அவரது நெருங்கிய தோழி வி.கே. சசிகலா, கடந்த பிப். 24 அன்று 'அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து, வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் கூட்டணியை இறுதி செய்தார்.

ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பாமக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. கட்சி அன்புமணி வசம் சென்ற நிலையில், அன்புமணியின் துரோகத்தால் ராமதாஸும் ஆதங்கத்தில் உள்ளார்.

அதிமுகவால் துரோகம் இழைக்கப்பட்ட சசிகலாவும் அன்புமணியால் துரோகம் இழைக்கப்பட்ட ராமதாஸும் கூட்டணியாக வரும் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

Story image

சசிகலா - ராமதாஸ் கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்துமா?

தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, தவெக, நாதக ஆகிய 4 முனைப் போட்டியே முக்கியமானதாகப் பார்க்கப்படும் நிலையில் சசிகலா - ராமதாஸ் கூட்டணி என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என நினைக்கலாம்.

ஆனால், சசிகலாவின் புதிய கட்சியாலும் ராமதாஸுடனான கூட்டணியாலும் அதிமுகவின் வாக்குகள் பிரியும் என்றே கூறப்படுகிறது. அதற்குக் காரணம் குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகள்தான்.

தமிழகத்தின் தென் மற்றும் மத்தியப் பகுதிகளில் ஆதிக்கமுள்ள, பிற்படுத்தப்பட்ட சமூகமான தேவர் சமூகத்தினரைத் தன் பக்கம் ஈர்ப்பதே சசிகலாவின் ஒரே நோக்கமாக இருக்கிறது. இந்த சமூகத்தினர், முன்பு அதிமுகவுக்கு முக்கிய ஆதரவாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

தேவர் சமூகத்தினர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பேசி வருகிறார் சசிகலா. அவரது கட்சி வேட்பாளர்கள் திருமங்கலம் - ஜீவிதா நாச்சியார், உசிலம்பட்டி- முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன், ஆண்டிபட்டி - செல்லப்பாண்டியன், சாத்தூர் - இசக்கி ராஜா தேவர் ஆகியோர் அந்தந்த பகுதிகளில் இந்த சமூகத்தினரின் செல்வாக்கு பெற்றவர்கள்.

இந்த தேர்தலில் சசிகலா மொத்தம் 75 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளார். இவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் தேவர் சமூகத்தினர் அதிகம் உள்ள தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

அதேபோல ராமதாஸ் 'வன்னியர்' சமூகத்தினர் அதிகம் வசிக்கும் 37 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இதில் தருமபுரி தொகுதியும் அடங்கும். அங்கு அன்புமணியின் மனைவியும் ராமதாஸின் மருமகளுமான சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். ராமதாஸ், அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதுடன் விரக்தியில் பேசி வருகிறார். இது உணர்ச்சிரீதியாக அவரது சமூகத்தினரிடையே எதிரொலிக்கும். ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களும் மற்ற கட்சி வேட்பாளர்களைவிட அன்புமணியைக் குறிவைத்தே பிரசாரம் செய்து வருகின்றனர்.

வட தமிழகத்தில் அரசியல் ரீதியாகச் செல்வாக்கு உள்ள வன்னியர் சமூகத்தினர், மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 25 சதவீதம் ஆவர்.

Story image

ENS

அன்புமணி, அதிமுக கூட்டணியில் உள்ளதால் அன்புமணிக்கு எதிரான ராமதாஸின் பிரசாரம், அதிமுக வாக்குகளையேச் சிதைக்கும் என்று கருதப்படுகிறது.

தமிழகத்தில் பலமுனைப் போட்டி நிலவி வருவதால் 1,000 வாக்குகள் பிரிந்தால்கூட அது பல தொகுதிகளில் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றே சொல்லப்படுகிறது.

கடந்த 2021 தேர்தலில் 25 தொகுதிகளின் வெற்றிக்க்கான வாக்குகளின் வித்தியாசம் 3,000 -க்கும் குறைவே என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் வடக்கு, டெல்டா, தென் மாவட்டங்களில் சசிகலா - ராமதாஸ் இருவரும் இணைந்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிச்சயம் ஒரு பின்னடைவை ஏற்படுத்துபவர்களாக அமைவார்கள் என்றே அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுதவிர புதிய தமிழகம் கட்சியின் கே. கிருஷ்ணசாமி, மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் சுமார் 61 தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறங்கியுள்ள நிலையில், அவரும் அதிமுகவுக்கு, குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே பிரசாரம் செய்து வருகிறார். 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தனது புதிய தமிழகம் கட்சியை, அதிமுக கூட்டணியில் சேர்க்காத விரக்தியில் கிருஷ்ணசாமி உள்ளார். ஜெயலலிதாவை ஒப்பிட்டு எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார் கிருஷ்ணசாமி.

ஓ.பன்னீர் செல்வம்

ஓ.பன்னீர் செல்வம் - X

அதிமுகவில் 3 முறை முதல்வராக இருந்த, ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ. பன்னீர்செல்வம் தற்போது திமுகவில் இணைந்த நிலையில், அவரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே பிரசாரம் செய்து வருகிறார்.

அதேபோல திமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகனும், பல்வேறு தொகுதிகளில் தனது வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளார்.

சசிகலா, ஓபிஎஸ், கிருஷ்ணசாமி, ராமதாஸ் ஆகியோரின் பிரசாரம் வரும் தேர்தலில் குறிப்பாக அதிமுகவினரின் வாக்குவீதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Summary

Sasikala and Ramadoss alliance Split AIADMK Votes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.