சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்துப் பேசியுள்ளார்.
ஃபென்ஜால் புயலால் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன. அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஃபென்ஜால் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக விசிக சார்பில் ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை தொல். திருமாவளவன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.
இதையடுத்து இரு தலைவர்களும் அரசியல் நிலவரம் குறித்தும் பேசுவதாகத் தெரிகிறது.
ஏனெனில் சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது, அதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று சர்சைக்குரிய வகையில் கூட்டணியில் உள்ள திமுக குறித்துப் பேசியிருந்தார். இது அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்து கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக அவர், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார்.
இதையும் படிக்க | விசிக ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம்!
முன்னதாக, திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில்,
'அண்மையில் தமிழ்நாட்டைத் தாக்கிய ஃபென்ஜால் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இப்பேரிடரிலிருந்து மக்களை மீட்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் விசிக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கென ரூ. 10 லட்சம் வழங்கிட உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் தலா ஒரு மாத சம்பளத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா இரண்டு மாத சம்பளத்தையும் கொண்டு இந்நிதி முதல்வர் வழங்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | விஜய் மீது எந்த ஒரு சங்கடமும் இல்லை: தொல். திருமாவளவன்
ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம்
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகிய இருவரும் கலந்துகொள்ளவிருந்த நிலையில், அரசியல் விமர்சனங்கள் எழுந்ததால், சர்ச்சைகளைத் தவிர்க்க திருமாவளவன் இதில் கலந்துகொள்ளவில்லை என்று அறிவித்தார்.
இந்த விழாவில் கலந்துகொண்ட விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கூட்டணியில் உள்ள திமுகவை நேரடியாக விமரிசித்துப் பேசியிருந்தார். இது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவை 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.