விசிக ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம்!

விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவை இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பு.
விசிக ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம்!
Published on
Updated on
2 min read

விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவை 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று அறிவித்துள்ளார்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கூட்டணியில் உள்ள திமுகவை நேரடியாக விமரிசித்துப் பேசியிருந்தார். இது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகிய இருவரும் கலந்துகொள்ளவிருந்த நிலையில், அரசியல் விமர்சனங்கள் எழுந்ததால் திருமாவளவன் இதில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆதவ் அா்ஜூனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருப்பதாக கட்சியின் முன்னணி நிா்வாகிகள் தலைமையின் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பதாகவும் இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, ஆதவ் அர்ஜூனாவை 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்து தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

1. கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரியவந்தது.

2. இது குறித்து கடந்த 7-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும் அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால், கட்சியின் நலன்கள் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.

5. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீரமானிக்கப்பட்டது.

6. அதன்படி ஆதவ் அர்ஜுனா, கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com