
நமது நிருபர்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ}க்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் அருந்தி 60}க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வழக்கின் விசாரணையை சிபிசிஐடி}யிடம் இருந்து சிபிஐ}க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதில், சிபிஐ வசம் கள்ளச்சாராய வழக்கை ஒப்படைத்துள்ளதால் விசாரணை தாமதமாகக் கூடும் என தமிழக அரசு கூறியிருந்தது.
இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அப்போது, கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரித்தால் என்ன ஆகிவிடப் போகிறது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், இந்த வழக்கில் தமிழக காவல் துறை ஏற்கெனவே விசாரணையை முடித்துவிட்டதாகத் தெரிவித்தார்.
ஆனால், தமிழக அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக் கூறி, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.