தஞ்சை பல்கலை.யில் பதிவாளர் அறைக்குப் பூட்டு! 3 மணி நேரப் போராட்டம்!

தஞ்சை பல்கலை.யில் பதிவாளர் அறைக்கு பூட்டு மேல் பூட்டு போடப்பட்டு 3 மணி நேரப் போராட்டம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
Published on
Updated on
2 min read

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணை வேந்தர் - நீக்கப்பட்ட பதிவாளர் இடையேயான மோதல் இன்று உச்சகட்டத்தை எட்டியது. பதிவாளர் அறைக்கு பூட்டு மேல் பூட்டு போடப்பட்டு 3 மணி நேரம் போராட்டம் நீடித்தது.

3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பதிவாளரின் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார் புதிய பதிவாளர்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணை வேந்தர் சங்கர் - பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் இடையே மோதல் உருவானது. இதனால் கடந்த சனிக்கிழமை இருவரும், ஒருவருக்கு ஒருவர் பணி நீக்கம் செய்வதாக உத்தரவு போட்டனர்.

இந்த நிலையில் புதிய பதிவாளர் வெற்றிச்செல்வன் இன்று பதவி ஏற்பதாக துணைவேந்தர் சங்கர் அறிவித்திருந்தார். இதற்கு நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

மேலும் புதிய பதிவாளர் பதவி ஏற்க விடாமல் பதிவாளரின் அறையை, நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜன் பூட்டினார். இந்த நிலையில் வெளிப்பக்கக் கதவை துணைவேந்தர் சங்கர் பூட்டினார். இருவரும் அறைகளை பூட்டியதால் பதவி ஏற்பதில் பெரும் சர்ச்சை ஆனது.

இதனையடுத்து துணைவேந்தர் சங்கரும் - பதவியேற்க இருந்த பதிவாளர் வெற்றிச்செல்வனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினர். மூன்று நேரத்திற்கு பிறகு வெளி அறை பூட்டு உடைத்து திறக்கப்பட்டு, உள் அறையின் பூட்டும் உடைக்ப்பட்டு கதவுகளை ஊழியர்கள் திறந்தனர்.

அப்போது நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜனின் ஆதரவாளர்கள், தலைமைச் செயலர் உத்தரவு இருக்கும்போது ஏன் கதவை உடைக்கிறீர்கள் என காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வாய்மொழி உத்தரவு எல்லாம் செல்லாது, துணைவேந்தர் உத்தரவு உள்ளது என காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். கதவு உடைக்கப்பட்ட பின்னர், புதிய பதிவாளர் வெற்றிச்செல்வன் உள்ளே சென்று புதிய பதிவாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனால் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 3 மணி நேரம் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த, நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜன் கூறுகையில், தற்போது தலைமைச் செயலர் தொலைபேசியில் என்னிடம் தொடர்பு கொண்டு பதிவாளராக நீங்கள் தொடர்ந்து செயல்படுங்கள், மாத இறுதி என்பதால் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியங்களை வழங்கும் பணிகளை தொடருங்கள் எனக் கூறியதாகவும், எனவே பதிவாளர் அறைக்குச் செல்லாமல், நான் பதிவாளராக தொடர்வேன் என்றார்.

பின்னர் பொறுப்பு துணை வேந்தர் சங்கர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 40 பேர் நியமன முறைகேடு தொடர்பாக உள்ள வழக்கில் வரும் 8 தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணைக்கு தமிழ்ப் பல்கலைக்கழக வருவதாகவும், இந்த முறைகேடு விசாரணையில் நீக்கப்பட்ட தியாகராஜன் பெயரும் உள்ளதால் வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என அவர் நீக்கம் செய்யப்பட்டார். மேலும் சட்டபூர்வமாக புதிய பதிவாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதில் எந்த விதிமீறல்களும் இல்லை. ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகாரம் புதிய பதிவாளர் வெற்றிசெல்வனுக்கு உள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேட்டில் நீக்கப்பட்ட தியாகராஜன் பெயரும் உள்ளதால், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். 10 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனை செய்த பிறகே பதிவாளரின் அறை உடைக்கப்பட்டது. அதில் எந்த விதிமீறல்களும் இல்லை என அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com