மத்திய இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.55 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், "நாட்டில் மூன்று முக்கிய பொருளாதார ரயில் வழித்தடத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்; 40,000 சாதாரண ரயில் பெட்டிகள், "வந்தே பாரத்' தரத்தில் மாற்றப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், துறைமுகங்களை இணைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்த புதிய வழித்தடத் திட்டங்கள் உதவும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:
எரிசக்தி, தாது மற்றும் சிமென்ட் வழித்தடம், துறைமுக இணைப்பு வழித்தடம், அதிக போக்குவரத்து வழித்தடம் என மூன்று முக்கிய பொருளாதார வழித்தடத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இத்திட்டங்கள், சரக்கு கையாளுகை பணித் திறனை அதிகரிப்பதோடு, செலவு குறைப்புக்கும் உதவும்.
நாட்டில் பன்முக போக்குவரத்து இணைப்பை உறுதி செய்வதற்கான பிரதமரின் "கதி சக்தி' திட்டத்தின்கீழ், மேற்கண்ட வழித்தடத் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்களின் உருவாக்கத்தால், பயணிகள் ரயில் போக்குவரத்து மேம்படும். ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வேகம் அதிகரிப்புக்கு உதவும்.
சரக்கு ரயில்களுக்கான பிரத்யேக வழித்தடங்கள் அமைக்கப்பட்டுவரும் நிலையில், கூடுதலாக இந்த மூன்று முக்கிய பொருளாதார வழித்தடங்களும் அமைவது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை வேகப்படுத்தும். சரக்கு கையாளுகை கட்டணங்களும் குறையும்.
40,000 சாதாரண ரயில் பெட்டிகள், வந்தே பாரத் தரத்தில் மாற்றப்படும். இதன்மூலம் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதி உறுதி செய்யப்படும் என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.