நஷ்டப்பட்ட விவசாயிக்கு இயற்கை செய்த உதவி.. நடவு செய்யாத நிலத்தில் 50 மூட்டை அரிசி!

தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் விளைநிலத்தில் நடந்த அதிசய சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. 
நஷ்டப்பட்ட விவசாயிக்கு இயற்கை செய்த உதவி
நஷ்டப்பட்ட விவசாயிக்கு இயற்கை செய்த உதவி
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் விளைநிலத்தில் நடந்த அதிசய சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. 

பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (52). இவருக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நெல் பயிரிட்டுள்ளார். ஏக்கர் ஒன்றிற்கு ரூ.50 ஆயிரம் செலவு செய்த நிலையில், போதுமான விளைச்சல் இல்லாமல், செலவு செய்த தொகை கூட கிடைக்காமல் நஷ்டம் அடைந்துள்ளார். இதனால் கடந்த முறை நெல் சாகுபடி செய்யாமல் அப்படியே விளைநிலத்தை தரிசாக விட்டுவிட்டார். அதற்குப்பின் வயலுக்குச் செல்லாமல் ஜெயராஜ் இருந்துள்ளார். 

இந்நிலையில் அப்பகுதி மக்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் வயலில் கதிர் விட்டு பயிர்கள் சாய்ந்துள்ளது ஏன் அறுக்காமல் வைத்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயராஜ் கடந்த சில மாதங்களாக வயலுக்குச் செல்லாமல் இருந்து மீண்டும், வயலை பார்க்கச் சென்றபோது அங்கு கதிர் விட்டு பயிர்கள் சாய்ந்துள்ளது. இதனைக் கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தார். 

இது பற்றி ஜெயராஜ் கூறுகையில், கடந்த முறை நெல் விவசாயம் செய்து பலத்த நஷ்டம் அடைந்த நிலையில், அதற்குப்பின் நெல் விவசாயத்தையே மறந்து விட்டு தான் வேறு தொழிலைப் பார்க்கச் சென்று விட்டேன். இந்த நிலையில் என்னுடைய வயலில் கதிர் விட்டு நெல் பயிர்கள் சாய்ந்து கிடக்கிறது என்று தகவல் தெரிந்து வயலுக்குச் சென்று பார்த்த போது எனக்கே இது ஆச்சரியமாக உள்ளது. நான் நடவு நடவில்லை, விதை விதைக்கவில்லை, தண்ணீர் பாய்ச்சியதில்லை, உரம் வைக்கவில்லை ஆனால் ஒரு மாவுக்கு 8 மூட்டை வீதம்  6 மாவுக்கு 50 மூட்டை நெல் விளைந்திருக்கிறது. 

இது என்னை மட்டுமல்ல இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த முறை கதிர் அறுத்துவிட்டு அடியில் உள்ள அறுப்பு தாளிலிருந்து பயிர் வளர்ந்து அதன் மூலம் நெல் விளைந்துள்ளது என்னைப் போன்ற விவசாயிகளுக்கு ஆச்சரியமாக உள்ளது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து பயிரிட்டபோது கிடைக்காத நெல் விளைச்சல் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் தற்போது ஒரு மாவுக்கு எட்டு மூட்டை விளைந்திருப்பது மிகப்பெரிய சந்தோசமாக உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com