கூட்டணிக்கு பெரிய கட்சிகள் பல பேசிக்கொண்டிருக்கின்றன என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கை தொடர்பாக அதிமுகவின் 2வது ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களை சந்தித்து நாளை முதல் கருத்துக் கேட்க உள்ளோம்.
10 பேர் கொண்ட குழுவும், நேரடியாக சென்று மக்களை சந்தித்து கருத்து கேட்க உள்ளோம். 5 ஆம் தேதி வேலூர் மண்டலம், 6ஆம் தேதி விழுப்புரம் மண்டலத்தில் மக்களை சந்திக்கிறோம். மண்டலம் வாரியாக மக்களை சந்தித்து கருத்துக் கேட்கிறோம். அந்தந்த மண்டலங்களுக்குட்பட்ட மாவட்டங்கள் வாரியாக கருத்துகள் கேட்கப்படும். மக்கள் தங்கள் பரிந்துரை, கருத்துகளை இமெயில் மூலமாகவோ, கூரியர் மூலமாகவோ அனுப்பலாம்.
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு பாஜக இல்லாத கட்சிகளை வரவேற்கிறோம். கூட்டணிக்கு பெரிய கட்சிகள் பல பேசிக்கொண்டிருக்கின்றன. சிறப்பாக தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.