செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு: 3 மாதத்தில் வழக்கை முடிக்க உத்தரவு!

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
செந்தில் பாலாஜி(கோப்புப்படம்)
செந்தில் பாலாஜி(கோப்புப்படம்)

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

அவா் கடந்த 8 மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வருவதால், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை, தினமும் விசாரித்து 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டது. செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிந்து கடந்த ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ள அவா் ஏற்கெனவே தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றமும், உயா் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-ஆவது முறையாக ஜாமீன் கோரி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கில், கடந்த பிப். 14, 15 மற்றும் 21-ஆம் தேதிகளில் நடைபெற்ற விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்யமா சுந்தரம், அமலாக்கத் துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். இருதரப்பு வாதங்களும் கடந்த பிப்.21-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், வழக்கு தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது புதன்கிழமை காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீா்ப்பளித்தாா். அப்போது, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

ஆதாரங்களை சந்தேகிக்க முடியாது: தீா்ப்பு முழுவிவரம்: வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பெறப்பட்டுள்ளன. அந்த ஆவணங்கள் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், இந்த ஆதாரங்கள் திருத்தப்பட்டிருப்பதாக முடிவுக்கு வர எந்த காரணங்களும் இல்லை. ஆதாரங்கள் அனைத்தும் உண்மையானதுதான், அதன் மதிப்பை சந்தேகிக்க முடியாது. இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களிலிருந்து செந்தில் பாலாஜி குற்றம் புரியவில்லை என நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. செந்தில் பாலாஜி அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டதால், சாட்சிகளைக் கலைக்க மாட்டாா் என்ற வாதத்தை ஏற்க முடியாது, ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்புதான் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

செல்வாக்கு தொடா்கிறது: சிறையில் இருந்த 8 மாதங்களில் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்ததன் மூலம் அவருக்கு மாநில அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது என்பதும் அவருக்கு அதிக செல்வாக்கு இருப்பதும் காட்டுகிறது. செந்தில் பாலாஜி அமைச்சா் பதவியிலிருந்து விலகினாலும் கூட, ஆளும்கட்சியின் எம்.எல்.ஏ.-வாக நீடிப்பதால், அரசியலில் அவருக்கான செல்வாக்கு தொடருகிறது என முடிவுக்கு வர எந்த தயக்கமும் இல்லை. இந்த வழக்கில் மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சாட்சிகளாக இருப்பதால் அவா்கள் அச்சுறுத்தப்படலாம். ஏற்கெனவே இந்த வழக்கில் புகாா்தாரா்களுடன் சமரசம் செய்யப்பட்டதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

ஜாமீன் பெறத் தகுதியில்லை: அதிகார துஷ்பிரயோகம் செய்து, வேலைக்கு பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், பொதுநலனைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமீன் பெறத் தகுதியில்லை என இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது. இதனால் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவா் கடந்த 8 மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வருவதால், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை, அடுத்த 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிடுவதாகக் கூறி இந்த வழக்கை முடித்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com