புகையிலைப் பொருள் விற்கும் கடைகளுக்கு உடனடி ‘சீல்’: ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு உடனடியாக நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ ‘சீல்’ வைக்கப்படும்
ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி

சென்னை: தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு உடனடியாக நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ ‘சீல்’ வைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

கல்வி நிறுவனங்களுக்கு அருகே சிகரெட் விற்பனை செய்தாலும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவா் கூறினாா்.

இதுதொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் 391 வகை புகையிலை சாா்ந்த பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அதற்கான தடையை மேலும் ஓராண்டுக்கு உணவு பாதுகாப்புத் துறை நீட்டித்துள்ளது.

கடந்த டிசம்பா் 11-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை மக்கள் நல்வாழ்வுத் துறை ஆய்வு மேற்கொண்ட ஆய்வில் 993 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மொத்தம் ரூ.37.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் காவல் துறையினா் நடத்திய ஆய்வில் 1,400 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதற்கு முன்பு வரை விதிகளுக்கு புறம்பாக புகையிலை பொருள்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு முதன்முறை ரூ.5 ஆயிரமும், இரண்டாவது முறை ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. மூன்றாவது முறை விதிகளை மீறும்போது

ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது முதல்முறையிலேயே கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை தன்னிச்சையாக விற்கக் கூடாது. அத்தகைய செயல்களில் ஈடுபடும் மருந்தகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com