சென்னை: நாடு முழுவதும் ஆள்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்திருப்பது, மக்களுக்கும் காவல்துறைக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஒரே ஒரு ஆள்கடத்தல் வழக்குப் பதிவாகியிருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் தலா 577 மற்றம் 434 ஆள்கடத்தல் வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இது 2017ஆம் ஆண்டில் 13ஆகக் குறைந்துள்ளது. இப்படியே இது அடுத்தடுத்த ஆண்டுகளில் 8, 16, 11, 3 என குறைந்து வந்துள்ளது. இதையெல்லாம் விஞ்சும் வகையில், 2022ஆம் ஆண்டு ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவாகியிருப்பதாகக் கூறுகிறது. அதில், 2 சிறுமிகளை கடத்திச் சென்று கூலித் தொழிலாளிகளாக பணியமர்த்தியக் குற்றச்சாட்டில் 5 பேர் மீது வழக்குப் பதிவாகியிருக்கிறது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிரம் கூறுகிறது.
ஆனால், 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு, மாநிலத்தில் இதுபோன்ற வழக்குகள் குறைவாகப் பதிவாகியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆள்கடத்தல் மிகப் பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் முக்கியமானதாக இருந்தாலும், இவ்வளவு குறைவான வழக்குப் பதிவுகள், குற்றத்தைத் தடுக்க அமைக்கப்பட்ட சிறப்புப் பிரிவுகள் காகிதத்தில் மட்டுமே இருப்பதைக் காட்டுகிறது, மேலும் காவல்துறையினருக்கு குற்றம் பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவாகவே உள்ளது என்றும் குறிப்பிடுகிறார்கள்.
ஆள்கடத்தல் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படும்போது, அது தொடர்பான போதிய விழிப்புணர்வு மாநில காவல்துறையினருக்கு இல்லாததும், இதர குற்ற வழக்குகளுடன் இந்த வழக்குகளும் மாநில காவல்துறையால் கையாளப்படும்போது, இதன் வீரியம் குறைந்து விடுவதாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று, 2006ஆம் ஆண்டு முதற்கட்டமாக 5 மாநிலங்களிலும், பிறகு மற்ற மாநிலங்களிலும் ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு தொடங்கப்பட்டது.
நாடு முழுவதும் பரவலாக ஆள்கடத்தல் அதிகரித்தே உள்ளது, பெரும்பாலான ஆள்கடத்தல் சம்பவங்கள் ரயில்கள் மூலம் நடக்கிறது, எனவே, இந்த வழக்குக்குத் தொடர்பான சிறப்புப் பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது. முதல் ஐந்து ஆண்டு காலம் இதன் பணிகளும் சிறப்பாகவே இருந்துள்ளது.
ஆனால், 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு, உள்கட்டமைப்பு மற்றும் போதிய ஊழியர்கள் இல்லாததால், செயலிழக்கும் நிலை உருவாகியுள்ளது.
குற்றவியல் திருத்தச் சட்டம் 2013 கொண்டு வரப்பட்டது முதல் ஆள்கடத்தல் வழக்குகளில் இப்பிரிவு சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது. ஆனால், அதன்பிறகுதான் வழக்குகள் குறையத் தொடங்கின. அப்பிரிவில் பணியாற்றுவோரும், முழு உத்வேகத்துடன் செயல்படவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அடிப்படை உள்கட்டமைப்புகள் இல்லாதது, போதிய ஊழியர்கள் இல்லாமை போன்றவை. நாட்டில் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே இப்பிரவு போதிய ஊழியர்கள் மற்றும் உள்கட்டமைப்புடன் சிறப்பாக செயல்படுகிறது. மற்றபடி பெரும்பாலான மாநிலங்களில் இது தொடர்கதையாகிவிட்டது.
இதில்லாமல், பெரும்பாலான காவல்துறையினருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370 பிரிவு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததும் கூட. கிடைக்கும் மனிதவளத்துக்குள் ஒருங்கிணைப்பு இல்லாதது, கடத்தல் நடக்கும் மாநிலம் ஓரிடம், கடத்தப்படுவர் ஓரிடத்தில் இருப்பது போன்றவற்றால், மாநிலங்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லாதது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணம் வழங்கப்படாதது, பாதிக்கப்பட்டவர்களை கடத்திச் சென்றவர்கள் மிரட்டும் போக்கு போன்றவையும் இதற்கான காரணங்களாக உள்ளதாக சமூக ஆர்வலர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த தனிப்பிரிவுக்கு போதிய தகுதிவாய்ந்த அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கென தனி காவல்நிலையமும், தேவையான உள்கட்டமைப்புகளையும் செய்து கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.