சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஜயகாந்திற்கு இரங்கல் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உடல்நலக் குறைவால் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் டிசம்பர் 28-ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரபல நடிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியுள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.
மேலும் படிக்கவும் : விஜயகாந்த் நினைவிடத்தில் சரத்குமார் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி, “தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்திற்கு வருகின்ற 19-ஆம் தேதி இரங்கல் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். நடிகர் சங்கத்தில் பெரிய சவால்கள் வரும்போது எல்லாம் நாங்கள் அனைவரும் நினைக்கக்கூடிய நபராக கேப்டன் இருந்தார்.” என்று தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக 2000 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் விஜயகாந்த் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.