சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அரங்கில் தொடங்கி நடைபெற்று வரும் 47 ஆவது சென்னை புத்தகக் காட்சி இன்று (ஜன.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்களுக்காக இன்று ஜனவரி 8ஆம் தேதி ஒரு நாள் மட்டும் புத்தகக் காட்சிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
நாளை வழக்கம் போல புத்தகக் காட்சி செயல்படும் என்று பபாசி தலைவர்/செயலாளர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், புத்தகக் காட்சிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பபாசி சார்பில் நடைபெறும் 47-ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான 47-ஆவது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 3ஆம் தேதி தொடங்கியது.
நிகழாண்டு புத்தகக் காட்சியில் சுமார் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் மாலையில் சிந்தனை அரங்கில் அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
ஜனவரி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ள புத்தகக் காட்சியை விடுமுறை நாள்களில் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரையும், வேலை நாள்களில் பிற்பகல் 2 மணிமுதல் இரவு 8.30 மணி வரையும் பார்வையிடலாம். இதற்கு ரூ.10 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும். அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதம் வரை சலுகை வழங்கப்படுகிறது.