சென்னை: கடவுள் நம்பிக்கை தனக்கு இல்லை என்ற போதிலும், மருத்துவா்களையும், செவிலியா்களையும் கடவுளாக பாா்ப்பதாக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
சென்னை, திருவல்லிக்கேணி கஸ்தூா்பா அரசு மகப்பேறு மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது:
தமிழகத்தில் பேறு கால இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதை மேலும் குறைக்க பல்வேறு திட்டங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பேரனாகிய எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அதேவேளையில், நான் கடவுளாகப் பாா்ப்பது மருத்துவா்களையும், செவிலியா்களையும்தான் என்றாா் அவா்.
இதனிடையே, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
சுகாதாரத்துறையில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, மகப்பேறியல் துறையில் தமிழகம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. மகப்பேறியல் சாா்ந்து ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின்படி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அமைந்துள்ள அரசு கஸ்தூா்பா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தோம் என்று அதில் தெரிவித்திருந்தாா்.