போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நாளை(ஜன. 9) முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப் படியை உயா்த்த வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்து இருந்தன.
இந்த நிலையில், மூன்றாம் கட்ட முத்தரப்பு பேச்சுவாா்த்தை சென்னை, தேனாம்பேட்டையிலுள்ள தொழிலாளா் நலத் துறை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. தொழிற்சங்கள், போக்குவரத்துத்துறை அதிகாரிகள், தொழிலாளர் நல ஆணையத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சிஐடியூ தொழிற்சங்கத்தின் செளவுந்தரராஜன் கூறுகையில், "கோரிக்கைகளை ஏற்க அரசு தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. கோரிக்கைகள் மீது இப்போதைக்கு முடிவெடுக்க முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களை அரசு வஞ்சிக்கிறது" என அவர் தெரிவித்தார்.