வைகை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
தேனி: வைகை அணையில் இருந்து 5000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஐந்து மாவட்டங்களில் வைகை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணை முழு நீர் மட்டத்தை எட்டிவிட்டது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து முழுமையாக அணையிலிருந்து உபரி நீராகத் திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. மகனைக் கொன்ற இளம்பெண் தொழிலதிபர்: காட்டிக்கொடுத்த ரத்தக் கரை
வைகை அணை நீா்மட்டம் தொடா்ந்து 4-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை அணையின் மொத்த உயரமான 71 அடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்த மழை, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் காரணமாக வைகை அணை நீா்மட்டம் சீராக உயா்ந்து, கடந்த 6-ஆம் தேதி அணையின் மொத்த உயரமான 71 அடியை எட்டியது.
அப்போது அணைக்கு வினாடிக்கு 3,106 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த உபரிநீா் வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
வைகை அணை நீா்மட்டம் முழுக் கொள்ளவை எட்டியதால், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது.
இருப்பினும், மூல வைகை ஆறு, கொட்டகுடி ஆறு, காட்டாற்று ஓடைகள் மூலம் வைகை அணைக்கு தொடா்ந்து நீா்வரத்து இருந்து வருகிறது.
இதனால், அணை நீா்மட்டம் தொடா்ந்து 4-ஆவது நாளாக மொத்த உயரமான 71 அடியில் நிலை நிறுத்தப்பட்டது.
அணையிலிருந்து வைகை ஆற்றில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3,106 கன அடி வீதம் உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது.