பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கலப்புத் திருமணம் செய்த இளம்பெண்ணை கொலை செய்து சடலத்தை எரித்தது தொடர்பாக மேலும் மூன்று பேரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பூவளூர் ஊராட்சிக்கு உள்பட்ட நெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் மகள் ஐஸ்வர்யா(19), இவரும் பூவளூரை சேர்ந்த பாஸ்கர் மகன் நவீனும் (19) திரூப்பூர் மாவட்டம், அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் நிருவனத்தில் வேலை பார்தத்து வந்தனர்.
இந்நிலையில், பட்டியலினத்தை சேர்ந்த நவீன், மாற்று சமூகத்தை சேர்ந்த ஐஸ்வர்யா இருவரும் கடந்த டிச. 31 ஆம் தேதி கலப்பு திருமணம் செய்து கொண்டு திருப்பூர் அருகே உள்ள வீரபாண்டியில் வசித்து வந்தனர்.
அவர்களது திருமண நிகழ்வு கட்செவி அஞ்சல் வழியே உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் கடந்த 2 ஆம் தேதி பல்டம் போலீஸில் அளித்த புகாரின் பேரில் ஐஸ்வர்யாவை சமாதானம் செய்து , அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 3-ஆம் தேதி ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினார்கள் துன்புறுத்திக் கொலை செய்து எரித்து விட்டதாக நவீனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நவீன் வாட்டத்திக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கடந்த திங்கள்கிழமை பூவளூர் மற்றும் நெய்வவிடுதி பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் ராவத் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் தலைமையில் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், தாய் ரோஜா இருவரையும் பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை காவல்துறையினர் ஆஜர் படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்யா, 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதையும் படிக்க: ஹமாஸ் தளபதிகள் கொலை!: இஸ்ரேல் ராணுவம்
மேலும், இந்த கொலை வழக்கில் நெய்விவிடுதி கிராமத்தைச் சேர்ந்த சின்ராசு (31), முருகேசன் (34), செல்வம் என்ற திருச்செல்வம் (39) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்யா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.