அன்னூர் அருகே அல்லப்பாளையம் கிராமத்தில் புதிதாக வீடும் கட்டும் இடத்தில் கொலை செய்து புதைக்கபட்ட மனித உடலின் பாகங்கள் கண்டெடுக்கபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த மேகலா என்பவர் அன்னூர் அருகே அல்லப்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ திருமுருகன் நகர் என்ற தனியார் வீட்டுமனை விற்பனை செய்யும் பகுதியில் புதிதாக இடத்தை வாங்கி வீடு கட்டி வருகிறார்.
வீடு கட்டும் பணியினை கட்டுமான பொறியாளர் பிரகதீஷ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர் அப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்
இந்த நிலையில் இந்த வீடு கட்டும் பணியை மேற்கொள்ள கொத்தனாராக அசோக்குமார், சதிஷ், முருகையன் ஆகிய மூவரும் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த பத்து நாள்களாக பணியினை நிறுத்தி விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது
இதனையடுத்து இன்று தனது இடத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதை பார்வையிடுவதற்காக இடத்தின் உரிமையாளரான மேகலாவின் கணவர் பாலகிருஷ்ணன் வந்துள்ளார்.
கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்ட போது அங்கு துறுநாற்றம் வீசுவதைக் கண்டு அது குறித்து சந்தேகத்தின் பேரில் உடனடியாக அவர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.
பின்னர் காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்த்த போது அந்த கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் மனித உடல் புதைக்கபட்டது தெரியவந்தது.
மனித உடல் பாகங்கள் அழுகி துறுநாற்றம் வீசிய நிலையில் மனித உடலின் கால் பகுதி பாகங்கள் மேலே தெரிந்தது. இதனையடுத்து யாரோ ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்து இங்கு புதைக்கபட்டதுள்ளதாக காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்ததால் புதைக்கபட்ட நபரின் உடல் யாருடையது என அன்னூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் புதைக்கபட்ட உடலை தோண்டி எடுக்க அன்னூர் வட்டாட்சியரிடம் காவல் துறையினர் அனுமதி கோரியுள்ள நிலையில், அன்னூர் வட்டாட்சியர் முன்னிலையில் புதைக்கபட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்ட பின்னரே அந்த கொலை செய்யப்பட்ட நபர் யார் என்று தெரியவரும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: கர்நாடகத்தில் மின்சாரம் பாய்ந்து 8 வயது சிறுவன் பலி!
அதே சமயத்தில் இங்கு கொத்தனார் பணி மேற்கொண்டு வந்த அசோக்குமார் என்ற நபர் கடந்த 10 நாள்களாக காணவில்லை என்ற தகவல் காவல்துறைக்கு தற்போது தெரியவந்துள்ளதால் அவரை யாராவது கொலை செய்திருக்கலாமோ என சந்தேகிக்கும் காவல் துறையினர் அது குறித்து விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்