திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்துக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வருகை தந்தார். பின்னர் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை அவர் தொடங்கி வைத்தார். 2ஆவது நாள் சுற்றுப்பயணமாக இன்று (சனிக்கிழமை) சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு காலை 10.30 மணிக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் ஆட்சியர் மா.பிரதீப் குமார் மற்றும் அதிகாரிகள், கட்சியினர் பிரதமருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே அமைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கினார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சென்றார். அப்போது ரங்கா ரங்கா கோபுரம் முன்பு ஸ்ரீரங்கம் தலைமை அர்ச்சகர்கள் தலைமையில் தங்கக் குடத்தில் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.
பின்னர், கோயிலுக்குள் சென்று உற்சவர் ரங்கநாதரை தரிசனம் செய்தார். அதன் பின்னர் கருடாழ்வார் சன்னதி, பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதியில் வழிபாடு நடத்தினார். அதன் தொடர்ச்சியாக தாயார் சன்னதி அருகாமையில் கம்பராமாயண பாராயணத்தைக் கேட்டார்.
அதன் பின்னர் தாயார் சன்னதியில் நவராத்திரி கொலு மண்டபத்தில் அஷ்டலட்சுமி விளக்கேற்றி வழிபாடு செய்தார். இன்று ராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் வழிபாடு நடத்தியுள்ளார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஹெலிகாப்டர் இறங்கு தளம் அருகாமையில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.
மேலும், ரங்கநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள கோணக்கரை முருகன் கோவில் மற்றும் உத்தர வீதி பகுதிகளில் பரதநாட்டிய கலைஞர்கள், குச்சிப்புடி நடன கலைஞர்கள் தப்பாட்டக் கலைஞர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோயிலுக்குச் செல்லும் வழி நெடுகிலும் தன்னைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்துக்கிடப்பதைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, கார் கதவை திறந்து நின்றபடி பயணித்து, தொண்டர்களுக்கு கையசைத்து நன்றி கூறினார்.