சென்னை: மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், நிகழ்வாண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டியவை, நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும், மாநில மகளிர் கொள்கைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மாநில அளவில் மகளிர் கொள்கை வகுத்த முதல் மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.
இந்த மகளிர் கொள்கையில், வேலைவாய்ப்பில் மகளிருக்கு சம உரிமை, பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு பயிற்சி, அரசியலில் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு 6 மாதம் சிறப்புப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அடங்கும்.