கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமாக உயிரிழந்த நிலையில், ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மாணவியின் தாாயாரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு இன்று (ஜூலை 1) விசாரணை மேற்கொண்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2022 ஜூலை 13-ஆம் தேதி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவரின் மரணத்தைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாயார் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். 2022 ஜூலை 17-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டு, பள்ளிக்குச் சொந்தமான உடைமைகள் சூறையாடப்பட்டன.
இதனையடுத்து மாணவி மரண வழக்கை சிபிசிஐடி காவல் துறையினரும், கலவர வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே இந்த வழக்கை வேறு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டுமென பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, கலவரம் தொடர்பாக மாணவியின் தாய் மற்றும் விசிக பிரமுகர் திராவிட மணி ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஏன் விசாரிக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அவர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டு வழக்கை ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், மரணமடைந்த பள்ளி மாணவியின் தாயார் செல்வி மற்றும் விசிக பிரமுகர் திராவிட மணியிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.