
நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்துள்ள காராமணி குப்பத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர்கள் இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், காராமணிகுப்பத்தில் வசித்து வந்தவர்கள் சுரேஷ்குமார் மனைவி கமலேஸ்வரி (60), மகன் சுதன்குமார் (40), சுதன் குமார் மகன் நிஷாந்த்(10). இவர்கள் கொலை செய்யப்பட்டு பூட்டிய வீட்டினுள் எரிந்த நிலையில் கிடந்தனர். இது தொடர்பாக நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணத்தில் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டனர்.
இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காராமணி குப்பம் சீதாராம் நகரை சேர்ந்த பழனி மகன் சங்கர் ஆனந்த்(21), முகமது அலி மகன் ஷாகுல் அமீது(20) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு வீடாகச் சென்று தேடிய காவல்துறையினர்
கடலூா் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரின் சடலங்கள் வீட்டுக்குள் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தில், மூன்று பேரின் உடல்களில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் இதனை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சம்பவம் நடந்த அன்று, அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான 700 செல்லிடப்பேசி எண்களை அடிப்படையாக வைத்தும், கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், கொலை நடந்த வீட்டுக்கு அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களின் விவரங்களை காவல்துறையினர் வீடு வீடாகச் சென்று சேகரித்து வந்தனர். அதில், அண்டை வீட்டைச் சேர்ந்த சங்கர் ஆனந்த் என்பவர், சம்பவம் நடந்த பிறகு வீட்டில் இல்லை என்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, அவரை சென்னையிலிருந்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர், சாகுல் அமீது என்பவருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீட்டுக்குப் பால் போடுபவர், பேப்பர் போடுபவர், வீட்டு வேலை செய்பவர் என பலரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்த நிலையில், இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுதன்குமாரின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுரேஷ்குமாரும், உடல் நலக் குறைவால் இறந்துவிட்டாா். எனவே, வீட்டில் கமலேஸ்வரி, சுதன்குமாா் மற்றும் நிஷாந்த் மட்டும் வசித்து வந்தனா். இவா்களது வீட்டிலிருந்து கடந்த திங்கள்கிழமை காலை துா்நாற்றம் வீசியதுடன், புகை வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனா். அப்போது, எரிந்த நிலையில் கமலேஸ்வரி, சுதன்குமாா், நிஷாந்த் ஆகியோா் இறந்து கிடந்தனா். இதையடுத்து, 3 பேரின் சடலங்களையும் போலீஸாா் மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராம் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.