துணை முதல்வர் பதவி குறித்து பரவிவரும் செய்திகள் குறித்து திமுக இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணியின் 45-வது தொடக்க விழா இன்று தேனாம்பேட்டையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ”அரசியல் களத்தில் மக்களைச் சந்திப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல இன்றைக்குச் சமூக வலைத்தளங்களும் மிக மிக முக்கியமாக இருக்கின்றன. குறிப்பாக, பாஜக வெறும் பொய்களைப் பரப்பி, பொய்களை மட்டுமே பேசி, அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம்முடைய இயக்கத்திற்குத்தான் வரலாறும் சாதனைகளும் இருக்கின்றன. அவற்றை நாம் சமூக ஊடகப் பக்கங்கள் வழியாக மக்களிடம் பரவலாகக் கொண்டு சேர்க்க வேண்டும்.
நான் முதல்வருக்குத் துணையாக வரவேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பத்திரிகைகளில் இது தொடர்பான கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
என்னை துணை முதலமைச்சர் ஆக்குவதுபற்றி பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேட்கின்றனர். எங்கள் கட்சியின் அனைத்து அமைச்சர்களுமே முதல்வருக்கு துணையாகத் தான் இருக்கிறோம். அனைத்து அமைப்பாளர்களுமே முதல்வருக்குத் துணையாகத் தான் இருப்போம். எத்தனை பதவிகள் வந்தாலும் என்னுடைய மனதிற்கு மிக நெருக்கமானது திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்புதான்” என்று கூறினார்.
மேலும், “2026 தேர்தல் நமக்கு மிக முக்கியமானது. நடந்து முடிந்த தேர்தல்கள் குறித்து ஆய்வுசெய்த போது கணிசமான அளவில் பெண்கள் நமக்கு வாக்களித்துள்ளனர். பெண்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் போன்றவை நமது முதல்வருக்கு மக்களிடையே நல்லப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
ஆண்களுக்கும் ‘தமிழ் புதல்வன் திட்டம்’ என்ற பெயரில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டமும் கொண்டுவரப்பட இருக்கிறது. இதனையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்லுங்கள். வருகின்ற 2026 தேர்தலிலும் நமது கழகத் தலைவர் வெற்றிபெற்று தமிழ்நாட்டை ஆள்வார்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.