
தமிழகத்தில் ஜூன் 20 வரை லேசான மழையும், அதேசமயம் ஜூன் 18 வரை வெயில் அதிகமாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக லேசான மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஜூன் 20 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அடுத்த ஐந்து நாள்களுக்கு ஜூன் 18 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை/இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்கள் இன்று முதல் ஜூன் 18 வரை மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 42 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.