சென்னை: தமிழறிஞர் மண்மொழி இராசேந்திர சோழன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளார் அஸ்வகோஷ் என அறியப்படும் இராசேந்திர சோழன் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பாமக நிறுவனர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், தமிழ் சிந்தனையாளரும், மண்மொழி இதழின் ஆசிரியருமான இராசேந்திர சோழன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் ஆசிரியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற இராசேந்திர சோழன், தமிழ்த்தேசிய பொதுவுடமைப் பார்வை கொண்டவர். தமிழ் மீது பற்று கொண்ட இவர், ஏராளமான படைப்புகளுக்கு சொந்தக்காரர்.
எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். கொள்கைத்தளத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றியவர். இராசேந்திர சோழனை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள், படைப்பாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சில காலம் உடல்நலம் குன்றியிருந்த இராசேந்திர சோழன் சென்னையில் காலமானார். எழும்பூர் நீதிமன்றம் அருகே நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள அவர் மகன் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
இராசேந்திர சோழன் உடல், அவர் விருப்பப்படி, இன்று பிற்பகல் 3 மணியளவில் மகன் வீட்டிலிருந்து அரசு மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்படுகிறது என நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.