இனாம் சமயபுரத்தில் அருள்மிகு ஆதிமாரியம்மன் திருக்கோயில் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், இனாம் சமயபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஆதி மாரியம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் தேர் திருவிழாவானது பிப்.26ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் உற்சவ அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. உற்சவ அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து உற்சவ அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திருத்தேரினை பக்தர்கள் ஒம் சக்தி, பராசக்தி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
தேர் திருவிழாவில் கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி, மணியக்காரர் பழனி ஜம்பு குருக்கள், கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.