தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து அருகில் உள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி, வண்டிப் பெரியாறு, கட்டப்பனை, நெடுங்கண்டம் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் கடந்த பல ஆண்டுகளாக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.
கரோனா காலகட்டத்தில் மாநிலங்களிடையே போக்குவரத்து தடைசெய்யப்பட்டு சுமார் 4 ஆண்டுகள் போக்குவரத்து இயங்கவில்லை.
அதன்பிறகு கடந்த 6 மாதங்களாக இடுக்கி மாவட்டத்திற்கு வழக்கம் போல் தமிழக மற்றும் கேரள பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மார்ச் 5 முதல் கம்பத்திலிருந்து கோட்டயம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் ஆகிய கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 6 பேருந்துகள் குமுளி மற்றும் கம்பம்மெட்டு வழியாக இயக்கப்படுகிறது.
அண்டை மாநிலமான கேரளத்தின் முக்கிய நகரங்களுக்கு கம்பம் நகரில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளால் பொதுமக்கள், வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.