வாட்ஸ் ஆப்பில் 'தம்ஸ் அப்' (கட்டைவிரலை உயர்த்தி காட்டுவது போலான) எமோஜி பயன்படுத்தியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
2015-ல் ரயில்வே காவலர் பிரிவில் பணியில் சேர்ந்த நரேந்திர செளகான் என்கிற காவலர் 2018-ம் ஆண்டு வாட்ஸ் ஆப் குழுவில் வந்த செய்திக்கு ‘தம்ஸ் அப்’ எமோஜி அனுப்பியுள்ளார்.
அந்த செய்தி, துணை தளபதி ஒருவரை காவலர் கொடூரமாக கொன்றது பற்றியது. காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த நிகழ்வு காவலர்களின் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டது.
இந்த செய்திக்கு செளகான் அனுப்பிய எமோஜி, குற்றவாளிக்கு ஆதரவளிப்பதாக உள்ளதாகக் கூறி அவருக்கு மெமோ வழங்கப்பட்டது.
ஒழுங்கு நடத்தை குழு விசாரித்து செளகானை பணி நீக்கம் செய்தது.
இதனை எதிர்த்து செளகான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் ஆர்.விஜயகுமார் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, ‘தம்ஸ் அப்’ எமோஜி என்பது ஓகே (சரி) என்பதற்கு பதிலீடு தானே தவிர கொடூர மரணத்தை வரவேற்பது கிடையாது எனவும் காவலர் அந்த செய்தியைப் பார்வையிட்டதற்கான ஒப்புதல் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் காவலர் அளித்த விளக்கத்தை ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.