மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி, பாஜகவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பல்வேறு மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பிதாரிலிருந்து கோவைக்கு மார்ச் 18 ஆம் தேதி பிரதமர் வருகிறார். அன்று கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து ஆர்.எஸ். புரம் வரை நடைபெறும் வாகனப் பிரசாரத்தில் பங்கேற்கிறார்.
பொதுத் தேர்வு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என்று கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கோவையில் நடைபெறும் பிரதமர் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி கோவை பாஜக நிர்வாகி ரமேஷ் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு இன்று(மார்ச். 15) தொடுத்தார்.
இந்த வழக்கை, அவசர வழக்காக இன்றே எடுத்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ், மார்ச் 18-ல் கோவையில் நடைபெறும் பிரதமரின் வாகனப் பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
மேலும், பேரணி செல்லும் வழி, தூரம், நேரம் ஆகியவற்றை காவல் துறையினர் முடிவு செய்ய வேண்டும் எனவும், பேரணி நடைபெறும் வழித்தடங்களில் பதாகைகள் வைக்க அனுமதியில்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.