கம்பம்: பருவ கால நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும்போது முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர் வள ஆணையகத்தின் தலைமையிலான கண்காணிப்பு குழு அணைப் பகுதிகளில் உறுதி தன்மை மற்றும் பராமரிப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தும்.
தற்போது கோடைக்காலம் தொடங்கி விட்டதால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், நீர் வரத்து, இருப்பு, வெளியேற்றம், நீர் கசிவு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்வர்.
திங்கள்கிழமை ஆய்வு நடத்த மத்திய கண்காணிப்பு தலைமை குழு முடிவு செய்தது. இந்த நிலையில் சனிக்கிழமை மாலை முதல் தேர்தல் விதி முறைகள் அமல்படுத்தப்பட்டதால் அணையில் ஆய்வு செய்வது ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக பெரியாறு வைகை பாசன வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளரும், பெரியாறு அணையின் செயற்பொறியாளருமான (பொறுப்பு) ஜே.சாம்இர்வின் கூறியது,
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் மத்திய தலைமை கண்காணிப்பு குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்யும் நிகழ்வு மறு தேதியின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.