போதைப்பொருள் நடமாட்டத்துக்கு அதிமுக-பாஜகதான் காரணம்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

ஊழலை சட்டபூர்வமாகச் செய்வதே பாஜகவின் பாணியாகும்.
போதைப்பொருள் நடமாட்டத்துக்கு அதிமுக-பாஜகதான் காரணம்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

சென்னை: பாஜக ஆளும் குஜராத்தில்தான் அதிகயளவு போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது. போதைப்பொருள் நடமாட்டத்துக்கு அதிமுக-பாஜகதான் காரணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கேள்வி-பதில் வடிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி:

வாக்குறுதி அளித்த பல திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் உங்களது அரசு நிறைவேற்றியுள்ளது. சொல்லாதவற்றையும் செய்துள்ளது. இதில் உங்களுக்கு நெருக்கமான திட்டம் என்ன? உங்கள் ஆட்சிக்காலத்தின் ஏற்ற இறக்கங்களாக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்?

ஒரு தாய்க்கு தனது எல்லாக் குழந்தைகளும் சிறந்த குழந்தைகள்தான். அது போல், எனது அனைத்துத் திட்டங்களும் சிறப்பான திட்டங்கள்தான். முக்கியமான திட்டங்கள்தான். முதல்வராகப் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்துப் போட்டது விடியல் பயணம் திட்டத்துக்காக. நகரப் பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தந்தது கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் பயனளித்து வருகிறது. மாதம் தோறும் ரூ.800 வரை சேமிக்கிறார்கள். இதைவிட முக்கியமாக, பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி உள்ளது. அதேபோல் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலமாக 1.15 கோடி பெண்கள் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெற்றுள்ளார்கள். நாங்கள் இதனை அறிவித்த போது, நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தார்கள். மிகக்கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும் மகளிருக்கு உரிமைத் தொகையை வழங்கியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

என்னுடைய கனவுத் திட்டம்தான், 'நான் முதல்வன்' திட்டம். படித்த இளைஞர்கள் அனைவர்க்கும் தனித்திறமையை ஏற்படுத்தி, அனைத்துப் பணிகளுக்கும் அவர்களைத் தகுதியானவர்களாக ஆக்கி வருகிறோம். அரசுப் பள்ளியில் படித்து விட்டு உயர்கல்வியை நோக்கி வரும் மாணவியர்க்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மாணவியர் மத்தியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவியர்க்கு மட்டும் தானா, மாணவர்க்கு இல்லையா என்ற கோரிக்கையை ஏற்று, 'தமிழ்ப்புதல்வன்' என்ற பெயரில் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மதிய உணவுத் திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தும் வகையில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். 17 லட்சம் பிள்ளைகள் தினமும் காலையில் வயிறார உணவு உண்ட பிறகு கல்வி கற்கிறார்கள். இதனைப் பார்க்கும்போது என் மனம் நிறைகிறது.

முதல்வரின் காலை உணவுத் திட்டம் போல. தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத மேலும் பல திட்டங்களை மீதமுள்ள உங்கள் ஆட்சிக்காலத்தில் எதிர்பார்க்கலாமா?

தமிழ்நாட்டின் நிதிநிலையை அதலபாதாளத்தில் விட்டுச் சென்றது முந்தைய அதிமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்த மூன்றாண்டு காலத்தில் அதனை இயன்ற அளவில் சரிப்படுத்தி, மேம்படுத்தி வருகிறோம். எனினும், தமிழ்நாட்டிற்குரிய வரிப்பங்கீடு, திட்டங்களுக்கான ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் மத்திய பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. அதனால், தொடர்ந்து கடும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட சூழலிலும் மக்கள் நலன் காக்கும் காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்களையும், ஒவ்வொரு மாவட்டத்திற்கான கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கிச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். 2024 மே மாதத்திற்குப் பிறகு, நிதிநிலைமை சீராகும் சூழல் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களுக்கான புதிய திட்டங்கள் தொடரும். இன்னும் பல திட்டங்கள் வர இருக்கின்றன.

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு நிதி ஒதுக்காதது மாநில அரசுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த அணுகுமுறை புதிய திட்டங்களைத் தீட்ட விடாமலும், இருக்கும் திட்டங்களைத் தக்க வைக்க முடியாமலும் மாநில அரசின் திறனைப் பாதிக்கிறதா?

மத்தியில் பாஜக ஆட்சி செய்யும் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களின் அடிப்படை உரிமைகளும், நிதி ஆதாரங்களும் பறிக்கப்பட்டிருக்கின்றன. முந்தைய அதிமுக ஆட்சியாளர்கள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உதய் மின் திட்டம், நீட் தேர்வு நுழைவு என

மத்திய பாஜக அரசின் மேலாதிக்கப் போக்கிற்கு அடிபணிந்து விட்டார்கள். இதன் காரணமாக மாநிலத்தின் நிதி நிலைமையும் கடும் பாதிப்புக்குள்ளானது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அதனைச் சீர்ப்படுத்தி வருகிறோம்.

மெட்ரோ ரயில் திட்டம், வெள்ளப் பேரிடர் உள்ளிட்ட எதற்கும் ஒன்றிய அரசு உரிய நிதி ஒதுக்குவதில்லை. எனினும், தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு உரிய கட்டமைப்புகளை உருவாக்கித் தரவும் உரிய நடவடிக்கைகளை எடுத்து, அதற்கான நிதிஆதாரங்களைத் திரட்டி, திட்டங்களைச் செயல்படுத்துவது தொடரும்.

நிதிக் கட்டுப்பாடுகளை விதித்து எதிர்க்கட்சிகள் தங்கள் மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற விடாமல் மத்திய அரசு தடுக்கிறதா? இத்தகைய கட்டுப்பாடுகள், நிதியை விடுவிப்பதில் தாமதம் ஆகியவை பாஜகவை எதிர்க்கும் மாநிலங்கள் மீது அழுத்தம் கொடுப்பதற்காகவே செய்யப்படுவதாக நினைக்கிறீர்களா?

மாநில உரிமைகளைப் பறிக்கும் பாஜகவின் முதன்மை இலக்கு, இந்தியாவில் மாநில அரசுகளே இருக்கக்கூடாது என்பதுதான். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களை இரட்டை இஞ்சின் அரசு என்று அவர்கள் வர்ணிப்பதன் மூலமே, பாஜக ஆட்சியில்லாத மாநில மக்களின் நலன்களைப் புறக்கணிப்பதைப் புரிந்துகொள்ளலாம். அதிலும் தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது என்பதால் முற்றிலுமாகப் புறக்கணிக்கும் போக்கு தொடர்கிறது. இதன் மூலமாக, மக்களுக்கு மாநில அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழலை உருவாக்கி, தேர்தல் களத்தில் விமர்சனம் செய்யலாம் என்பது பாஜகவின் கணக்கு. ஆனால், அது தப்புக் கணக்காகத்தான் முடியும். பாஜகவுக்கு எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வைக்கும் வேட்டு என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.

திமுகவை வாரிசு கட்சி என்றும் ஊழல் கட்சி என்றும் பிரதமர் மீண்டும் விமர்சித்திருக்கிறாரே?

பொதுவாக, மாற்றுக் கட்சியில் இருப்பவர்கள் நம்மை விமர்சனம் செய்யும்போது ஒரு சில பொய்களை, தவறான தகவல்களை வெளியிடுவது உண்டு. ஆனால், பிரதமர் போன்ற மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் அப்படிச் செயல்படமாட்டார்கள். பண்டிதர் நேரு முதல் டாக்டர் மன்மோகன் சிங் வரை பிரதமர்கள் அப்படித்தான் இருந்தார்கள். ஆனால், மோடியும் அவரது பாஜக நிர்வாகிகளும் தவறான தகவல்களைச் சொல்பவர்களாகவும், வதந்திகளை வாட்ஸ்ஆப் வழியாகப் பரப்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டிருக்கிற பாஜக நிர்வாகிகளும் உண்டு. அவை குறித்து, கேள்வி எழுப்பினால் பதில் இருக்காது. இன்னொரு வதந்திக்கோ, விமர்சனத்திற்கோ தாவி விடுவார்கள்.

மத்திய அரசின் எந்தத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு முடக்கியது என்று கேட்டால் அதற்குப் பதில் வராது. காரணம், மத்திய அரசின் பங்களிப்போடு நடைபெறும் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழ்நாடு அரசு தன் பங்களிப்பைக் கூடுதலாகச் செலுத்தி, சிறப்பாக நிறைவேற்றி அதற்காக மத்திய அரசின் சார்பிலேயே விருதுகளையும் பெற்றுள்ளது. இது பிரதமர் தொடங்கி பாஜக நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும். அதனால்தான் திமுக மீது வாரிசு அரசியல், ஊழல் முறைகேடு என்று திசைதிருப்பும் விமர்சனங்களை வைப்பது வழக்கமாகிவிட்டது.

நான் கருணாநிதி மகன்தான். அவருடைய கொள்கை வாரிசுதான். அந்த அடிப்படையில்தான் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து முதல்வராகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். பாஜக வெளியிட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாரிசுகளுக்கு பிரதமரும் அவரது கட்சி நிர்வாகிகளும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு எனத் தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கையும், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ள நிதியும் பாஜகவின் உண்மை முகம் என்ன என்பதைக் காட்டியிருக்கிறதே அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? ஊழலை சட்டபூர்வமாகச் செய்வதே பாஜகவின் பாணியாகும்.

முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோருக்கு எதிரான வழக்குகளும், அமைச்சர் இ. பெரியசாமிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் திமுகவின் பிம்பத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?

இவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை. அமைச்சர் பொன்முடி மீதான தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அமலாக்கத்துறை எதிர்க்கட்சிகளைப் பணியவைக்கும் துறையாக பாஜக ஆட்சியில் மாறிவிட்டதை தேர்தல் பத்திர ஊழல் வெளிக்கொண்டு வந்துவிட்டதே. இதில் இருந்தே அமைச்சர் செந்தில் பாலாஜி அரசியல்ரீதியாகக் குறிவைக்கப்படுவதைப் புரிந்துகொள்ளலாம். திமுக அரசுக்கு மக்களிடம் உள்ள நற்பெயருக்கும் செல்வாக்குக்கும் களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற முயற்சிகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதனைச் சட்டரீதியாக எதிர்கொள்வோம்.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சியை மோடி புகழ்ந்து பேசி இருக்கிறார்? இதன் அரசியல் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

ஜெயலலிதா ஆட்சியை ஊழல் ஆட்சி என்று இதே மோடியும் அமித்ஷாவும் விமர்சித்திருக்கிறார்கள். இப்போது எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் போற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் தங்களுடைய சாதனை என்று பாஜகவால் எதையும் சொல்ல முடியாது. திமுக ஆட்சியின் சாதனைகள் மீதோ, பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் அரசியல் கொள்கைகள் மீதோ பாஜகவால் ஸ்டிக்கர் ஒட்ட முடியாது. அதனால் எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் பயன்படுத்துகிறார்கள்.

போதைப் பொருள் வழக்கில் கைதான திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை முன்வைத்து பாஜகவும் அதிமுகவும் திமுகவை விமர்சித்து வருகின்றனர். முதல்வராக இவ்விவகாரம் குறித்து நீங்கள் பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியிருக்கிறார். உங்கள் ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாகக் கூறி மனிதச் சங்கிலிப் போராட்டமும் நடத்தியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன?

குட்கா ஊழலில் தனது அமைச்சர் மீதும், காவல்துறை தலைவர் மீதும் நேரடியாக குற்றம்சாட்டப்படும் அளவில் ஆட்சி நடத்தியவர்தான் பழனிசாமி. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கமும் அவரது ஆட்சியில்தான் அதிகமாகின. அம்மையார் ஜெயலலிதா ஆட்சியிலேயே கஞ்சா-ஹெராயின் வழக்குகள் போடப்பட்டதையும், அவை எப்படிப்பட்டவை என்பதையும் நாடறியும். அதனால், எடப்பாடி பழனிசாமியின் கட்சியினர் நடத்திய மனிதச்சங்கிலி போராட்டம் என்பது தேர்தல் நேர ஸ்டண்ட்.

பாஜக ஆட்சி செய்யும் குஜராத்தான் போதை மருந்துகளின் தலைநகரமாக உள்ளது என்பதைப் பல புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அண்மையில், பழனிசாமியும் அதே குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார். ஆக, இந்த இரண்டு கட்சிகளும்தான் போதைப் பொருள்களுக்கு வித்திட்ட கட்சிகள். ஜாபர் சாதிக் விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தி.மு.க. மீதுஅவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.

அண்மைக்காலமாக அடிக்கடி பிரதமர் மோடி தமிழ்நாட்டின் பக்கம் தலைகாட்டுகிறார். கடந்த பத்தாண்டுகளில் அவர் இத்தனை குறுகிய இடைவெளிகளில் தமிழ்நாட்டுக்கு வந்ததே இல்லை. 2014, 2019 தேர்தல் காலத்தில் கூட இதே நிலைதான். தற்போது அவர் அடிக்கடி வரக் காரணம் இங்கு பாஜகவுக்கு வாய்ப்புள்ளது என நினைப்பதாலா அல்லது வடக்கில் அவர்கள் வலிமையாக உள்ள மாநிலங்களில் இம்முறை வெற்றி சந்தேகம் என நினைப்பதாலா?

இந்தியா முழுவதும் மோடி தலைமையிலான அரசின் பத்தாண்டுகால ஆட்சியின் அவலங்களும் அதனால் அதிருப்திகளும் வெளிப்பட்டு வருகின்றன. அது தேர்தல் களத்தில் நிச்சயம் எதிரொலிக்கும். தமிழ்நாடும் தென்மாநிலங்களும் அதைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே எதிரொலித்தன. தமிழ்நாட்டிற்கு என்னென்ன நன்மைகள் செய்தார் என்று மக்களிடம் உண்மையைச் சொல்ல முடியுமா? அவர் வருகிற ஒவ்வொரு முறையும் அவரே தனது ஆட்சியின் அவலங்களை நினைவுபடுத்திவிட்டுச் செல்வார்.

2021-இல் இருந்து தமிழ்நாட்டில் பாஜக பெரிதும் வளர்ந்துள்ளதாக அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிதான் முழுவெற்றி பெறும் என்று அறிவிக்கும் சில கருத்துக்கணிப்புகளும் பாஜக தலைமையிலான கூட்டணி 20% வரை வாக்குகளைப் பெறும் என்கின்றன. அப்படியானால் தமிழ்நாட்டில் தாமரை நிலைபெற்றுவிட்டதா?

மாய பிம்பத்தைக் கட்டமைக்க நினைக்கிறார்கள். (தாமரை) மலருமா கவிழுமா என்ற உண்மையைத் தேர்தல் முடிவுகள் காட்டிவிடும்.

2019-இல் பாஜக வெற்றி பெற்ற இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? நிதிஷ் குமார், ஜெயந்த் சவுதரி ஆகியோர் வேறு இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டார்களே?

2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதும் இதேபோல ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று ஆளும் பாஜக தன் பிரசாரத்தை முன்னெடுத்தது. கருத்துக் கணிப்புகளும் அதனையொட்டியே இருந்தன. குறிப்பாக, வட மாநிலங்களில் பாஜக ஆதரவு அலை என்று தெரிவித்தன. எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமையில்லை என விமர்சிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கே சாதகமாக அமைந்தன. அடுத்த பத்தாண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்றது. 2004 போலத்தான் 2024 தேர்தல் முடிவுகளும் அமையும். வரலாறு திரும்பும்.

உ.பி., மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம், ஹரியானா, கோவா ஆகிய வட மாநிலங்களில் இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீட்டை நிறைவுசெய்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. ஆனால், மத அரசியல் தாக்கம் செலுத்தும் பாஜக வலிமையாக உள்ள மாநிலங்களில் அவர்களை எதிர்க்கப் போதுமான நடவடிக்கைகளை இந்தியா கூட்டணி மேற்கொண்டுள்ளதா? குறிப்பாக ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு…

இந்தியா கூட்டணியை முற்றிலுமாகத் தகர்த்துவிடலாம் என்ற பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறவில்லை என்பதைத்தான் தங்களின் கேள்வி வெளிப்படுத்துகிறது. மதவாத அரசியல் என்பது பாஜகவின் அடிப்படைக் கொள்கை. மக்களின் பக்தியுணர்வை வாக்குகளாக மாற்ற நினைப்பது அதன் தேர்தல் உத்தியாக இருக்கலாம்.

மதச்சார்பின்மை – பன்முகத்தன்மை - மாநில உரிமைகளை எந்தளவு பா.ஜ.க. சிதைத்துள்ளது என்பதும் மக்களுக்குத் தெரியும். அதை உரிய வகையில் தேர்தல் களத்தில் எடுத்துரைக்கும் பணியை இந்தியா கூட்டணி உறுதியாகவும் தெளிவாகவும் மேற்கொள்ளும்.

மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளுக்கும் மமதா பேனர்ஜி வேட்பாளர்களை அறிவித்துள்ளார். ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய லோக் தளத்துடன் மற்றுமொரு கட்சியை இந்தியா கூட்டணி இழந்துவிட்டதா?

ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்தக் கட்சிகளுக்கு செல்வாக்கு இருக்கிறதோ அதற்கேற்பத் தொகுதிப் பங்கீடு இருக்க வேண்டும் என்பதும், அந்தந்த மாநிலங்களிலும் பெறுகின்ற முழுமையான வெற்றியின் மூலம் ஒன்றிய அரசில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்திலேயே வலியுறுத்தியிருக்கிறேன். ஒரு சில கட்சிகள் தங்களின் மாநில அரசியல் சார்ந்த கண்ணோட்டத்தில் செயல்படுவதைத் தவிர்க்க முடியாது. பாஜக மீது மக்களுக்குள்ள கோபத்தை வாக்குகளாக மாற்றும் சக்தி பெற்ற அரசியல் கட்சிகளே தற்போதைய தேர்தல் களத்தில் முதன்மையாக இருப்பதைப் பல மாநிலங்களிலும் காண முடிகிறது.

5 மாநிலத் தேர்தல் தோல்விகளில் இருந்து (தெலங்கானா வெற்றி தவிர்த்து), இந்தி மாநிலங்களில் பாஜகவை சமாளிக்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி மீண்டுவிட்டதா?

ஒரு சில மாதங்களுக்கிடையே நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இடையில் மக்களின் தீர்ப்புகள் மாறுபட்டிருப்பதைப் பல தேர்தல்களில் பார்த்திருக்கிறோம். இனியும் பார்க்கலாம்.

கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறிய நிலையில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய் யாத்திரையைத் தொடர்ந்ததைச் சிலர் விமர்சிக்கிறார்களே?

ராகுல் காந்தி இந்தியாவின் நம்பிக்கைக்குரிய தலைவராக உள்ளார். அரசியல் மட்டுமல்ல சமூகக் கருத்துகளையும் துணிச்சலாக அவர் வெளிப்படுத்தி வருகிறார். களத்தில் அவருடைய பங்களிப்பு நிறைய தேவைப்படும்.

தேர்தலுக்கு மிக நெருக்கத்தில்தான் இந்தியா கூட்டணி வேலையைத் தொடங்கியிருக்கிறதா? வாக்குகளைக் கவரப் போதிய அவகாசம் இருக்கிறதா?

இந்தியா கூட்டணி என்பது தன்னுடைய வேலைத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டது. அவற்றை ஒருங்கிணைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தேர்தல் பரப்புரைகளின் போது உங்களின் கேள்விக்கான விடையை நேரில் காண்பீர்கள்.

வி.சி.க.வுடன் நீங்கள் தொகுதிப் பங்கீட்டை முடித்த மறுநாள் அதன் துணைப் பொதுச்செயலாளர் மீது ரெய்டு நடக்கிறது. சிவசேனா, ஆர்ஜேடி, சமாஜ்வாதி கட்சித் தலைவர்களுக்கும் இது நடந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டன. இவை ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் என்கிறார் பிரதமர். இது வாக்காளர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? இது ஒரு தேர்தல் பிரச்சினையாக மாறுமா?

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் மற்றும் பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் இவற்றைக் குறிவைத்தே அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை சோதனைகள்

மேற்கொள்ளப்படுகின்றன என்பதை எல்லாரும் அறிவார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஜகவுக்குத் தாவி விட்டால், அவர்கள் மீதான ஊழல் கறையைச் சலவை செய்து தூய்மைப்படுத்தும் வாஷிங் மெஷினாக பாஜக செயல்பட்டு, அவர்களுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் பதவியும் வழங்கி வருகிறது.

மற்ற கட்சிகளையெல்லாம் ஊழல்வாதிகள் என்றும், தாங்கள் மட்டுமே யோக்கியசிகாமணிகள் என்றும் சொல்லி வந்த பாஜகவின் முகத்திரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அம்பலமாகியிருக்கிறது. அமலாக்கத் துறையால் நடவடிக்கைக்குள்ளான நிறுவனங்கள் பல அடுத்த சில நாட்களில் பாஜகவுக்குபெருமளவில் நிதியளித்திருப்பது வெளிப்பட்டுள்ளது. இதிலிருந்தே அரசியல் கட்சிகளையும் நிறுவனங்களையும் மிரட்டுவதற்காகவே அமலாக்கத்துறை என்கிற அமைப்பை மோடி அரசு பயன்படுத்தியிருப்பதும், அதன் மூலமாக நூற்றுக்கணக்கான கோடிகளை நிதியாகப் பெற்றிருப்பதும் உறுதியாகிவிட்டது. உண்மையான ஊழல் கட்சி பாஜகதான் என்பதை மக்கள் நன்றாகவே புரிந்துகொண்டார்கள்.

கூட்டணிக் கட்சிகளுடன் தமிழ்நாட்டில் வெற்றிகரமாகத் தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டீர்கள். 2019-ஐ விட இம்முறை குறைந்த தொகுதிகளில்தான் திமுக போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சியினரை அனுசரித்துப் போக வேண்டுமென திமுக சமரசம் செய்துகொண்டதா?

இது தேர்தல் கூட்டணி அல்ல. கொள்கைக் கூட்டணி என்பதை 2019, 2021 தேர்தல்களில் நிரூபித்தோம். அதே கூட்டணி இப்போதும் தொடர்கிறது. தோழமைக் கட்சிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தொகுப்பங்கீடும் எந்தச் சின்னத்தில் போட்டியிவது என்பதும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது ஓர் ஆரோக்கியமான கூட்டணியின் தொடர் செயல்பாடு. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் முழுமையான வெற்றி என்பதுதான் எங்கள் இலக்கு.

வடக்கில் காங்கிரஸ் பெற்ற தோல்விகளைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை இம்முறை குறைப்பீர்கள் எனக் கூறப்பட்ட நிலையில், அதே பத்து தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறீர்களே? ஏன்?

யூகங்களாகப் பல செய்திகள் வெளியாகியிருக்கலாம். ஒரு சில தேர்தல் தோல்விகள் அடிப்படையில் எல்லா அம்சங்களையும் புறக்கணித்துவிட முடியாது. பாஜகவுக்கு எதிராக நிற்கக்கூடிய தேசிய அளவிலான கட்சி காங்கிரஸ். அதற்குரிய இடத்தை வழங்கியிருக்கிறோம்.

தொகுதிப் பங்கீட்டில் திமுக மிகவும் தாராளமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறதே? மேலும் கடினமான தொகுதிகள் தானே நேரடியாகக் களமிறங்குவதாகவும் தெரிகிறது. இது என்ன உத்தி?

திமுகவைத் தோழமைக் கட்சியினர் நம்புகிறார்கள். தோழமைக் கட்சிகளை திமுக மதிக்கிறது. கள நிலவரத்தையும் திமுக உணர்ந்திருக்கிறது. இதன் வெளிப்பாடுதான் தற்போதைய தொகுதிப் பங்கீடு.

அதேநேரம், விடுதலைச் சிறுத்தைகளுக்குப் பொதுத் தொகுதி ஒதுக்காததால் விமர்சனமும் எழுந்துள்ளதே? அதில் என்ன சிக்கல்?

சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு பொதுத் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போட்டியிட்டு வெற்றி பெற்று, உறுப்பினர்களாக உள்ளனர். தற்போதைய தேர்தல் களத்தையும் சூழலையும் பற்றி முழுமையாகக் கலந்தாலோசித்துத்தான் முடிவுகள் எடுக்கப்பட்டன. அது குறித்து, சகோதரர் திருமாவளவன் அவர்களே தெளிவாக விளக்கிவிட்டார்.

திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி சேலம் மாநாட்டில், வரும் தேர்தலில் இளைஞரணியினருக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும் என வெளிப்படையாகக் கோரிக்கை வைத்துள்ளாரே? அது நடக்குமா?

மூத்தவர்கள் – இளையவர்கள் - பெண்கள் ஆகிய அனைவரையும் உள்ளடக்கியே வேட்பாளர் பட்டியல் இருக்கும்.

தேர்தல் ஆணையர் அருண் கோயலின் திடீர் பதவி விலகல் பல சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் அரசியல் அழுத்தமும் கருத்து வேறுபாடுகளும் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது பற்றி?

தன்னிச்சையாகச் செயல்படக்கூடிய எந்தவொரு அமைப்பையும் மத்திய பாஜக அரசு தன் கைப்பாவையாக மாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதைக் கடந்த 10 ஆண்டுகளில் பார்த்துவிட்டோம். தேர்தல் ஆணையத்தின் மீதான பாஜக அரசின் ஆதிக்கமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஜனநாயகத்தைக் காக்கின்ற போராட்டத்தில் இதனையும் கவனத்தில் கொண்டே செயல்படுகிறோம்.

தேர்தல் பத்திர வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு நம்பிக்கையளிக்கிறது. ஆனால் இதில் தேர்தல் ஆணையம் மற்றும் எஸ்பிஐ தெரிவித்த பதில் அந்த அமைப்புகளின் சுதந்திரத்தன்மை மற்றும் நேர்மையை சந்தேகத்துக்குள்ளாக்கியுள்ளதே?

இந்திய மக்களின் கடைசி நம்பிக்கையாக உச்சநீதிமன்றம் உள்ளது. அதன் உத்தரவுகளையே புறக்கணிக்க நினைப்பதும், காலம் தாழ்த்த நினைப்பதும் அரசமைப்புக்கு எதிரான செயல். ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள இந்தியாவின் கறுப்புப்பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்று சொன்ன மோடி தலைமையிலான பாஜக அரசு, அதில் ஒரு நயா பைசாவைக்கூட மீட்காமல், ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்லாயிரம் கோடிகளைப் பல நிறுவனங்களிடமிருந்து நிதியாகப் பெற்று, நீதிமன்றத்தையே ஏமாற்ற நினைத்தது அம்பலமாகியுள்ளது.

திமுகவும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளது எனக் கூறி பாஜக விமர்சனத்தில் இருந்து நழுவுகிறதே?

திமுக என்பது தனது முதல் தேர்தல் களத்திலிருந்தே தேர்தல் நிதி திரட்டுகிற இயக்கம்தான். 1967 தேர்தலில் 10 லட்சம் என்கிற தேர்தல் நிதி இலக்கு நிர்ணயித்தார் பேரறிஞர் அண்ணா. 11 லட்சமாகத் நிதி திரட்டித் தந்தார் கலைஞர். நாங்கள் நிதி திரட்டுவது என்பதும் அது குறித்த கணக்குகளை முறையாகத் தணிக்கை செய்வதும் வழக்கம்தான். இப்போதும் அதே வெளிப்படைத்தன்மையுடன்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டியிருக்கிறோம். ஆனால், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகளைக் குறையாக - குற்றமாகச் சொல்லிக்கொண்டிருந்த பாஜகவின் யோக்கியத்தன்மை என்ன என்பதும், அது யார்-யாரிடம் எதற்காக-எத்தகைய நெருக்கடி கொடுத்து தேர்தல் நிதியைப் பெற்றுள்ளது என்பதும் கவனத்திற்குரியது. கையும் களவுமாக சிக்கியுள்ளது பாஜக.

கர்நாடக பாஜக எம்.பி ஒருவர் அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என வெளிப்படையாகப் பேசியிருக்கிறாரே? அக்கட்சியினர் இப்படி பேசுவது இது முதல் முறையும் அல்ல. இது அரசியலமைப்புக்கு ஆபத்து என நினைக்கிறீர்களா?

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தையே தூக்கி எறிந்து விடுவார்கள். இதைத்தான் வெளிப்படையாக அவர் சொல்லி இருக்கிறார். பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கு இதைவிட வேறு காரணம் தேவையில்லை.

எதிர்வரும் தேர்தல் கொள்கைசார்ந்த மோதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்காளர்களிடம் கவனம் பெறும் விஷயங்களாக எவை இருக்கும்?

பாஜகவின் பொய் வாக்குறுதிகள், துரோகங்கள், மக்களைப் பிளவுபடுத்தும் சதிகள், மாநில உரிமைகளுக்கான ஆபத்து இவற்றுக்குள் நீங்கள் சொன்ன அனைத்தும் அடங்கும். அவையே தேர்தல் களத்தில் நாடெங்கும் எதிரொலிக்கும்.

5 ஆண்டுகள் கழித்து சிஏஏ நடைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகளை பாஜக அரசு அறிவித்துள்ளது. இது திசைதிருப்பும் உத்தி என்கிறார்கள் சிலர். வாக்காளர்களை மதரீதியாகப் பிரிவினை செய்யும் செயல் என்கிறார்கள் சிலர்? சிஏஏ பாஜகவின் இரகசிய ஆயுதமா?

மதரீதியாக – மொழிரீதியாக - சாதிரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலைத்தான் பாஜக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கம்தான் சிஏஏ. தற்போது சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கையாக மட்டுமே இது தெரிந்தாலும், எதிர்காலத்தில் ஒவ்வொரு மாநிலத்தில் வாழும் வெவ்வேறு மொழி பேசும் மக்களை நோக்கியும் புதிய சட்டங்களை பாஜக. கொண்டு வரும். அதற்கு சிஏஏ. ஒரு முன்னோட்டம்.

கேரளம், மேற்கு வங்க முதலமைச்சர்களைத் தொடர்ந்து நீங்களும் சிஏஏ தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படாது எனக் கூறியிருக்கிறீர்கள்? அது சாத்தியமா?

மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளிடம்தான் உள்ளது. இந்தி மொழி தொடர்பான ஒன்றிய அரசின் சட்டத்திற்கு எதிராகத்தான் பேரறிஞர் அண்ணா இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார். இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்கிற ஒன்றிய அரசின் நடைமுறையை மாநில அரசு ஏற்கவில்லை. அதுபோலத்தான் சி.ஏ.ஏ.விலும் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். இதற்குரிய அரசியல்சட்ட உரிமைக்கான வழியையும் நீதிமன்றத்தின் மூலம் நிலைநாட்டுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com