கோவையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பிரமாண்ட வாகனப் பேரணி தொடங்கியது.
கோவை சாய்பாபா காலனியில் இருந்து தொடங்கும் வாகனப் பேரணி, கங்கா மருத்துவமனை, வடகோவை, சிந்தாமணி வழியாக சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்று இறுதியாக ஆர்.எஸ்.புரத்தில் நிறைவடைகிறது.
பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் சாலையின் இருபுறங்களிலும் பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளனர். சாலையில் இரு புறங்களிலும் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
மோடியின் வாகனப் பேரணி நடைபெறும் 2.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு தொண்டர்கள், மக்கள் குவிந்துள்ளனர். சாலையில் இருபுறங்களிலும் சூழ்ந்து நின்று பூக்களைத் தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
பேரணியில் திறந்தவெளி வாகனத்தில் இருந்தவாறு தொண்டர்களை நோக்கி பிரதமர் மோடி கையசைத்தவாறு வந்தார். பேரணி வாகனத்தில் பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக தொண்டர்கள் அண்னாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஒரு மணிநேரம் நடைபெறும் பேரணி, ஆர்.எஸ். புரத்தில் நிறைவடைகிறது. அங்கு குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கான புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்துகிறார்.
இரவு கோவை சர்க்யூட் ஹவுசில் தங்கும் பிரதமர் மோடி, செவ்வாய்க்கிழமை காலை கேரளம் புறப்படுகிறார். கேரள மாநிலம் பாலக்காட்டில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் தமிழ்நாடு வருகிறார். சேலத்தில் நாளைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.