சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் இன்று பங்கேற்கவுள்ளனர்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.
கோவையில் நேற்று நடைபெற்ற வாகனப் பேரணியில் கலந்து கொண்ட மோடி, இன்று காலை பாலக்காடு பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து, இன்று பிற்பகல் சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், இன்று காலை பாஜகவுடனான கூட்டணியை பாமக உறுதி செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும் மோடியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.