பாஜகவில் மீண்டும் இணைந்தார் தமிழிசை செளந்தரராஜன்!
ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
மக்களவைத் தேர்தலில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவிகளை ராஜிநாமா செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில், ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்த பிறகு முதல்முறையாக இன்று காலை சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.
அவரை கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பாஜகவில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு திமுக கனிமொழியிடம் தோல்வி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2019 செப்டம்பரில் தெலங்கானா ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றார். பின்னர், புதுவை துணைநிலை ஆளுநராக 2021-ல் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.