பாமக வேடந்தாங்கல் பறவை போன்றது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
வேடந்தாங்கல் பறவைபோல் பாமக அடிக்கடி கூட்டணி மாற்றிக் கொண்டுள்ளனர் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் ஓமலூர் அதிமுக புறநகர் கட்சி அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியது, பாட்டாளி மக்கள் கட்சி வேடந்தாங்கல் பறவைபோல் அடிக்கடி கூட்டணி மாற்றிக் கொண்டுள்ளனர். ஏரியில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது பறவைகள் வரும்; தண்ணீர் வற்றினால் சென்றுவிடும். ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறிக்கொண்டிருக்கும் அந்த கட்சியைப் பற்றி பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார்.
ஏற்கனவே ராமதாஸ் பாஜகவிற்கு ஜீரோ மதிப்பெண் கொடுப்பேன் என்று கூறியிருந்தார். தற்போது அந்த கட்சியில் இணைந்து அவரது வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று கூறுகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கட்சியை ஆதரிக்கின்ற கட்சி தான் பாமக என்றும் தெரிவித்தார்.
அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்திருந்தபோது வெற்றி பெற்றோமா? என்று கேள்வி எழுப்பினர். அதிமுகவைப் பொறுத்தவரை கூட்டணியை பொறுத்து இல்லை; கூட்டணி வந்தால் வரவேற்போம். கூட்டணி கட்சிகள் வராவிட்டால் சொந்த பலத்தில் நிறைய திட்டங்களை நாட்டு மக்களுக்கு செய்துள்ளோம். 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக கட்சி துவங்கப்பட்டு பொன்விழா கண்ட கட்சி; அதிமுக ஆட்சியில் தான் தமிழகம் ஏற்றம் பெற்றது. எனவே கூட்டணி நம்பி கட்சி நடத்தவில்லை எனவும் கூறினார்.
கேஜரிவால் கைது குறித்து நிலைமை அறிந்து தான் பதில் சொல்லமுடியும்; ஊழல் நடந்துள்ளதா? இல்லையா? என்பது குறித்து எவ்வாறு நமக்குத் தெரியும். தில்லி வேறு ஒருமாநிலம், அந்த மாநிலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து முழுவிவரம் தெரியாமல் கருத்து கூற முடியாது. தவறு நடந்திருந்தால் தவறுதான்; தவறு நடக்காவிட்டால் கைது தவறுதான் எனவும் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு லஞ்சஒழிப்பு துறை ஏவி விட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்கு தொடர்ந்தார்கள். அதிமுக ஆட்சியில் இருந்தபோது மத்தியில் இருக்கும் வருமானவரித்துறை அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தினர். இது புதிதாக வரவில்லை; திமுக அரசால் பதியப்பட்ட வழக்கால் அமலக்கத்துறை சோதனை நடைபெற்றது. இதற்குக் காரணம் திமுக தான் என்றும் பேசினார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் கடுமையான ஊழல்; ஊழல் இல்லாத இடமே கிடையாது. போதைப்பொருள்களை திமுக நிர்வாகிகளே வெளிநாட்டுகளுக்கு கடத்துவதாக செய்தி வெளியாகிறது. அவ்வாறு இருக்கும் நிலையில் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால் அதிமுக வெற்றி பெற்றால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் என்றார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை நாளைய தினம் திருச்சியில் துவங்க உள்ளதாக கூறினார்.