நெல்லையில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிப்பு

நெல்லையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
நெல்லையில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிப்பு

திருநெல்வேலி: குருத்தோலை ஞாயிறு பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் சிறப்பு பவனி நடத்தினர்.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற பவனியில் இரு பேராயர்கள் பங்கேற்றனர்.

கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று முதல் கிறிஸ்தவர்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்து சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தேவாலயங்களில் வெள்ளிக்கிழமைதோறும் சிலுவைப்பாதையும், திருவிருந்து ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன. தூய சவேரியார் பேராலயம் சார்பில் தவக்கால சிலுவைப் பயண நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்நிலையில் புனித வாரத்தின் தொடக்கமாக குருத்தோலை ஞாயிறு சிறப்பு பவனி பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம் அருகில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கத்தோலிக்க திருச்சபையின் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி, தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டல பேராயர் பர்னபாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சவேரியார் ஆலயத்தையும், சிஎஸ்ஐ கிறிஸ்தவர்கள் மிலிட்டரி லைன் தேவாலயத்தையும் சென்றடைந்தனர். அங்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

நெல்லையில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிப்பு
ஆலங்குளத்தில் குருத்தோலை பவனி!

இதேபோல புதிய பேருந்து நிலையம் அருகே சேவியர் காலனியில் சேகரகுரு காந்தையா தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. சபை ஊழியர் கிறிஸ்டோபர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பவனியில் பங்கேற்றனர்.

சேவியர் காலனியில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம், மேலப்பாளையத்தில் உள்ள தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகரில் உள்ள குழந்தையேசு தேவாலயம், உடையார்பட்டியில் உள்ள இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள தூய அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள தூய அந்தோனியார் தேவாலயம், மகாராஜநகரில் உள்ள தூய யூதா ததேயூ தேவாலயம் ஆகியவற்றிலும் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பவனி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, இம்மாதம் 28 ஆம் தேதி பெரிய வியாழன் திருச்சடங்குகள் மற்றும் ஆராதனையும், 29 ஆம் தேதி புனித வெள்ளி பிரார்த்தனையும் நடைபெற உள்ளன. இம் மாதம் 31 ஆம் தேதி உயிர்ப்புப் பெருவிழா எனப்படும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com