பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தொழில் துறை முற்றிலும் சீர்குலைந்துவிடும் என ஈரோடு பிரசாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
ஈரோடு, நாமக்கல், கரூர் வேட்பாளர்களை ஆதரித்து ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பிரசார மேடையில் பேசிய அவர், "சிஏஜி அறிக்கை, தேர்தல் பத்திரம் முறைகேடுதான் பாஜக அரசின் ஊழலுக்கு எடுத்துக்காட்டு. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பாஜகவின் ஊழல் அம்பலப்படுத்தப்படும். ஊழல் செய்த பாஜகவைச் சேர்ந்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடை வழங்கியது திமுக அரசுதான். எதையும் செய்யமாட்டோம் என்பதே அதிமுக - பாஜக மாடல். இந்திய ஒன்றியத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் ஆட்சி அமைய வேண்டும்.
தமிழ்நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச்செல்லும் திட்டங்களை அதிமுகவும் பாஜகவும் எதிர்க்கின்றன. திமுக கொண்டுவந்ததால் மட்டுமே அந்த எதிர்ப்பு எழுகிறது. திமுக அரசின் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவதூறு பரப்பி வருகின்றனர்.
சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து இருண்ட கால ஆட்சியை கொடுத்தது அதிமுக ஆட்சி.
திட்டங்கள் மீது ஆரோக்கியமான விமர்சனங்களை வைத்தால் ஏற்றுக்கொண்டு மாற்றலாம், ஆனால் வேண்டுமென்ற அவதூறு பரப்புகின்றனர்.
மக்களுக்கான அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. பாரபட்சமின்றி அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் நல்லாட்சியை நடத்தி வருகிறோம்" என மு.க. ஸ்டாலின் பேசினார்.