கோவை பேரூர் அருகே வெள்ளியங்கிரி மலை ஏறிய மேலும் ஒரு பக்தர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோயிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் வந்த வண்னம் உள்ளனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கபட்டு உள்ள நிலையில் இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ரகுராமன்(50) என்பவர் நேற்று வெள்ளியங்கிரி மலை ஏறினார்.
அப்போது ஐந்தாவது மலை சீதை வனம் அருகே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதுகுறித்து உடன் சென்றவர்கள் வனத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் நேற்று மாலை 5 மணிக்கு சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் அங்கு சென்ற வனத் துறையினர் அவரை மீட்டு அங்கிருந்து பூண்டி அடிவாரப் பகுதிக்கு கொண்டு வந்து பார்த்தனர். அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ஆலந்தூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்களில் 3 பேர் ஏற்கெனவே பலியாகியிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.