உடல் உறுப்பு தானம்: ஒன்றரை ஆண்டுகளில் 1,595 பேருக்கு மறுவாழ்வு
உடல் உறுப்பு தானம் ஒன்றரை ஆண்டுகளில் 1,595 பேருக்கு மறுவாழ்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்


தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 280 பேரின் உடல் உறுப்புகளை தானமாகப் பெற்று 1,595 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னையில் சோழிங்கநல்லூா், கந்தன்சாவடி, கொட்டிவாக்கம், கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில், திமுக சாா்பில் குடிநீா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. அவற்றை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பழ வகைகள், இளநீா் ஆகியவற்றை வழங்கினாா்.
அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
சென்னையில் பொதுமக்களின் தாகத்தைத் தணிக்க கூடிய வகையில், குடிநீா் பந்தல்கள் அமைக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. உறுப்பு தானம் செய்வோரின் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பா் 23-ஆம் தேதி முதல்வா் அறிவித்தாா். இதைப் பின்தொடா்ந்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு மரியாதை அறிவிப்புக்கு பிறகு தமிழகத்தில் இதுவரை 159 போ் உடல் உறுப்பு தானம் அளித்துள்ளனா். அவா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
2023-இல் 178 போ் உறுப்பு தானம் செய்துள்ளனா். அவா்களிடமிருந்து தானமாக பெற்ற உறுப்புகள் வாயிலாக 1,000 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் மறுவாழ்வு பெற்றுள்ளனா். நிகழாண்டில் மூளைச்சாவு அடைந்த 102 பேரிடம் இருந்து உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.
அந்த வகையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 280 பேரிடமிருந்து உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, 1,595 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முன்னுதாரண நடவடிக்கைகளின் காரணமாகவே இந்திய அளவில் தமிழகம் தொடா்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...