
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61-ஆவது மலா்க் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தொடங்கிய மழை விட்டு விட்டு மழை பெய்து கொண்டு இருக்கின்றது. இந்த மழையால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி, சைக்கிள், குதிரை சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழைக் காரணாமாக கோடை விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று(மே 21) நடைபெறவிருந்த படகுப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
மேலும், கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக, மேல்மலைப் பகுதியான கூக்கால் ஊராட்சிக்குள்பட்ட பெருங்காடு பகுதி காட்டாற்றில் திங்கள்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.