ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஆம்பூரில் ஹவாலா பணம் ரூ.17 லட்சம் பறிமுதல்?

ஆம்பூர் அருகே பேருந்தில் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் ரூ.17 லட்சம் ஹவாலா பணம் என சந்தேகிக்கப்படும் நிலையில் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :21 மே 2024, 6:26 am

DIN

ஆம்பூர்: ஆம்பூர் அருகே பேருந்தில் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் ரூ.17 லட்சம் ஹவாலா பணம் என சந்தேகிக்கப்படும் நிலையில் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து வேலூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணம் செய்த நபர் ஒருவர் கொண்டு சென்ற பணத்தை இரு நபர்கள் மாதனூர் அருகே பேருந்தில் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த பணத்தை கொண்டு சென்ற நபர் நபர் அவர்களிடம் போராடி பணத்தை மீட்டுள்ளார். ஆனால் அவரிடமிருந்து செல்போன் மட்டும் பறித்துக் கொண்டு அந்த இரு நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் கழித்து, ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு வந்த அந்த நபர் தன்னிடமிருந்து பணத்தை இரு நபர்கள் பறிக்க முயன்றதாகவும், அது முடியாததால் தன்னுடைய செல்போனை மட்டும் அவர்கள் பறித்துக் கொண்டு சென்றதாக புகார் அளித்தார்.

புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல் நிலைய காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்த நூர் அஹமத் மகன் ஃபைரோஸ் கான் (26) என்பதும் அவர் ரூ.17 லட்சம் ரொக்க பணத்தை வேலூர் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் கொண்டு சென்றதும், அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த இரு நபர்கள் அந்த பணத்தை பறிக்க முயன்று முடியாமல் போனதால் அவருடைய செல்போனை மட்டும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது.

அவர் கொண்டு சென்ற ரூ.17 லட்சம் பணம் யாருடையது, எப்படி வந்தது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்ற காவல் துறையினரின் கேள்விகளுக்கு அவர் உரிய தகவல்களை தெரிவிக்கவில்லை.

அதனால், அது முறைகேடாக கொண்டு செல்லப்பட்ட ஹவாலா பணமாக இருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் அவரை வருமானவரித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க செவ்வாய்க்கிழமை காலை காவல்துறையினர் பணத்துடன் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.