திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மருத்துவமனையில் ரூ. 52 லட்சம் மோசடி: இளம்பெண் கைது

சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் ரூ. 52 லட்சம் பணத்தை மோசடி செய்த வழக்கில் இளம்பெண் ஒருவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :5 நவம்பர் 2024, 9:55 pm

சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் ரூ. 52 லட்சம் பணத்தை மோசடி செய்த வழக்கில் இளம்பெண் ஒருவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

சென்னை, அண்ணாநகர், தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி மைதிலி (47). இந்த தம்பதி அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், ஆபிஸர் காலனியில் 9 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வருகின்றனர். இங்கு கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், விக்ரவாண்டியம் கிராமத்தைச் சேர்ந்த செளமியா (24) என்பவர் கணக்காளராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மே மாதம் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மருத்துவர் மைதிலியை அணுகி, ஏடிஎம் கார்டு, ஜி-பே ஆகியவற்றின் மூலம் பணத்தை கட்ட சொல்லாமல் பணத்தை நேரில் கொடுக்குமாறு கூறுவதாக கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த மைதிலி வரவு-செலவு கணக்குகளை தணிக்கையாளர் (ஆடிட்டர்) மூலம் சரி பார்த்துள்ளார். அப்போது செளமியா, பல நோயாளிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு புத்தகத்தில் பதிவு செய்யாமல் பணத்தை கையாடல் செய்துள்ளார்.

இத்துடன், மருத்துவமனையில் வங்கிக் கணக்கு (ஜி- பே) வேலை செய்யவில்லை எனக்கூறி, செளமியா தனது வங்கி கணக்கிற்கு ஜி- பே மூலம் பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளார். இவ்வாறு கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம் வரை செளமியா ரூ. 52.24 லட்சத்தை கையாடல் செய்துள்ளது தெரியவந்தது.

இது குறித்து மைதிலி ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்மையில் புகார் அளித்தார். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை, ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ஆவண நம்பிக்கை மோசடி தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ரேகா தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தினார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை, கண்ணம்மாபேட்டை, சிஐடி நகர், பாரதி தெருவில் தலைமறைவாக இருந்த செளமியாவை செவ்வாய்க்கிழமை (நவ. 5) போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.