டானா புயல் முன்னெச்சரிக்கையாக ஒன்பது துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்கிழக்குப் பருவமழை விடைபெற்றதையடுத்து, கடந்த அக்.15 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
இதையடுத்து வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான்கடல பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணியளவில் மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
தற்போது ஒடிஸாவின் பரதீப்புக்கு தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளுக்கு 770 கி.மீ. தொலைவிலும், வங்கதேசத்துக்கு தென்கிழக்கே 740 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த மண்டலம் நிலை கொண்டுள்ளது.
நாளை(அக். 23) புயலாக வலுப்பெறவுள்ளது. இந்த புயலுக்கு டானா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல், வடமேற்கு திசையில் நகா்ந்து, அக்.24-ஆம் தேதி வடமேற்கு வங்கக் கடலில் ஒடிஸா - மேற்கு வங்கம் கடற்கரைக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.
இந்த நிலையில் நாளை உருவாகும் டானா புயல் தீவிரப் புயலாக வலுப்பெற உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூட்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.